குதிரைக்கும் ஆட்டுக்கும்
நேரிசை வெண்பா
கொம்பிலையே தீனிதின்னும் கொண்டதன்மேல் வெட்டுதலால்
அம்புவியில் நன்னடைய தாதலால் – உம்ப(ர்)களும்
தேடுநற் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆடுங் குதிரையுநே ராம். 65
- கவி காளமேகம்
பொருளுரை:
தேவர்களும் தேடிவந்து மகிழும் சோலைகளையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிலே ஆடும் குதிரையும் தம்முள் ஒன்றற் கொன்று சமானமாகும். எங்ஙனமெனில்,
ஆடானது: நுனிக்கொம்பிலுள்ள இலைகளையே தனக்குத் தீனியாகத் தின்பதனாலும், அதன்பின் அப்படித் தின்றபின்பு அதனை உண்பதற்காக வெட்டுவதாலும், அழகான இவ்வுலகிலே ஒன்றைப் பின்பற்றி மற்றொன்றும் நடந்து போகின்றதான அத்தகையவொரு அழகிய நடையினையும் உடையது.
குதிரையானது: கொம்பு இல்லாதது; தனக்கு வைக்கும் தீனியைத் தின்பது, வீரர்கள் அதன்மேல் ஏறிக்கொண்டு சென்று மாற்றாரை வெட்டி அழிக்க உதவியாயிருப்பது; அழகிய உலகிலே நல்ல அழகான நடையை உடையது;
ஆதலால், இவை இரண்டும் சமம் என்க. கதி - வேகம்