வண்ணப் பாடல் சிவன்

தனதன தனதன தனதன தனனா
தனதன தனதன தனதன தனனா
தனதன தனதன தனதன தனனா தனதானா

சிலையென வுளமதில் நடமிடு பவனே
உருகிடு மடியவ ரிடர்களை பவனே
திருநிறை யுமையவ ளுடனுறை பவனே பெருமானே!

சிவசிவ சிவவென நிதமுரை மனமே
கனவிலும் நனவிலு மினியிலை பயமே
திருமல ரடியினை வழிபட வளமே பெருகாதோ!

அலைதவழ் நதியொடு பிறையணி பதியே
புலியுடை யிடையினி லணிசெயு மிறையே
அழகிய பனிமலை தனிலுறை பரமே அருளாளா!

அகமதி லுனைநினை பவரது துணையே
இரவிலும் பகலிலு முடன்வரு முறவே
அருளுடன் மயிலையி லுறைபவ ளிணையே யருள்வாயே!

நிலமென வளியென அனலென விரிவா
னொடுசல மெனநிறை பவனிரு கழலே
நிலையென நனைபவ ருருகிட நலமே புரிவோனே!

நிழலென வருவினை களும்வில கிடவே
அமுதினை யருளிட விரைபவ னவனே
நிமலனி னெழில்மிகு விழியசை வினிலே நெகிழ்வேனே !

மலையர சனின்மகள் மனமகிழ் வுறவே
கயிலையி லவளொடு நடமிடு மரசே
மனமதி லருளினை யடைமழை யெனவே பொழிவாயே !

மலர்முக மெழிலொடு சுடர்விடு திருவே
யமபடர் வரும்பொழு துனையுளம் பிரியா
வரமதை யருளிட வரகர சிவனே வருவாயே!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 2:10 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 26

மேலே