ஊமையர் பாடலை ஒக்கும் என் பாட்டும் – அவையடக்கம் 3
.அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
முடவரே யாட அந்தர்
..முன்னின்று பார்த்து வக்கத்
திடமொடு மூகர் பாடச்
..செவிடர்கேட் டதிச யிக்கக்
கடலுல கினிற்கண் டென்னக்
..கனவினுங் கலையைத் தேரா
மடமையே னுலக நீதி
..வகுத்திடத் துணிந்தேன் மன்னோ. 3
- அவையடக்கம்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கடல் சூழ் உலகத்தில் கண்டதைப் போல் கனவிலும் கற்றுத் தேராத அறிவற்ற நான் நீதி நூல் கூறத் துணிவது, கால் ஊனமுற்றவர் ஆட அதைப் பார்வையற்றவர் பார்த்து மகிழ்வதற்கும், உறுதியோடு ஊமையர் பாட அதைக் காது கேளாதவர் கேட்டு வியப்பதற்கும் ஒப்பாகும்” என்று மிகுந்த அடக்கத்துடன் இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
அந்தர் - பார்வையற்றவர். மூகர் - ஊமையர்.