21 கை நழுவி உலகு அழியாது காப்பவன் கடவுள் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 5
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
பண்ணிய புவன மெல்லாம்
..படர்கையிற் பரிக்கும் ஏகன்
நண்ணிய கரஞ்சற் றோயின்
..நழீஇயொன் றோடொன் மோதித்
திண்ணிய வகில கோடி
..சிதைந்துகு மெனவ றிந்தும்
புண்ணிய மனுவால் தேவைப்
..போற்றிடா வாறென் னெஞ்சே. 5
- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”ஏற்பட்ட உலகங்கள் எல்லாவற்றையும் தனது விரிந்த கையில் வைத்துக் காப்பவன் தனிமுதற் கடவுள். பொருந்திய அழகிய கைகள் சற்று ஓய்ந்தால், கைநழுவி ஒன்றோடு ஒன்று மோதி நிலையான உலகங்கள் கோடியும் அழிந்துபோகும் என அறிந்தும் மிகுந்த விருப்பத்துடன் ஒப்பில்லாத கடவுளைப் போற்றித் தொழாதது ஏன் நெஞ்சமே” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.
நண்ணிய – பொருந்திய, நழீஇ – நழுவி, மனு - விருப்பம்.