வண்ணப் பாடல் 102

தந்தனன தானதன
தந்தனன தானதன
தந்தனன தானதன தனதானா (அரையடிக்கு)

மஞ்சள்வெயில் மாலைதனில்
வண்டுலவு சோலைதனில்
வந்தமலர் வாசமது நிறையாதோ

மஞ்சுதவழ் வானழகை
யுண்டமன மாவலொடு
வஞ்சிமக ளோடிணைய விழையாதோ

நெஞ்சுருகி யோடிவரு
மின்பமது கூடவரும்
நின்றுவிடு மோகனவு மெனவாடி

நெம்பியெழு மாசையொடு
பொங்கிவரு காதலோடு
நிண்டிவிளை யாடவவ ளருகோடே

தஞ்சமென நானடைய
மஞ்சமென மேனியொடு
தங்கமக ளோடுறவி லிணைவேனே

தந்தனன தானதன
வென்று நடமாடி வரு
தண்டலையி லேமயிலி னழகோடே

அஞ்சலென வேயமுது
தந்தவளு மூடலுற
அன்புமிக வேதழுவி யணைவேனே

அந்திபகல் நாளுருள
என்றும்பிரி யாதபடி
அன்றிலென வாழவரம் பெறுவேனோ ?

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-May-20, 8:32 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 46

மேலே