விடை சொல்வாய் கூற்றுவனே

விடுதலைக்கு வழியின்றி
வீட்டுக்குள் சிறைபட்டோம்!
கடுகளவும் கருணையிலாக்
கரோனாவால் துன்புற்றோம்!
தடுப்பதற்கு முடியாமல்
தவிப்புடன்நாள் கழிக்கின்றோம் !
அடுக்கடுக்காய் உயிர்ப்பலியால்
அனுதினமும் துடிக்கின்றோம் !!

கொடுமரக்கன் புவிதனிலே
கொலைவெறியோ டுழல்கின்றான் !
தொடுவாரைத் தான்பற்றித்
தொடர்வேட்டை நடத்துகின்றான்!
நடுங்கவைக்கும் உயிர்பயத்தை
நட்டுவிட்டுச் சுழல்கின்றான் !
படுகுழிக்குள் தள்ளிவிட்டுப்
பாவியவன் நகைக்கின்றான் !!

முடுக்கிவிட்ட தாராரோ
முடிவிதற்கு வாராதோ ?
எடுத்ததெல்லாம் போதாதோ
இடர்ப்பாடு தீராதோ ?
விடுவிக்க யார்வருவார்
மேதினியைக் காப்பாற்ற?
விடக்கிருமி சாகாதோ
விடைசொல்வாய் கூற்றுவனே!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (8-May-20, 3:53 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 46

மேலே