குமரேச சதகம் - நோய்க்கு வழிகள் - பாடல் 30

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கல்லினால் மயிரினால் மீதூண் விரும்பலால்
கருதிய விசாரத்தினால்
கடுவழி நடக்கையால் மலசலம் அடக்கையால்
கனிபழங் கறிஉண்ணலால்

நெல்லினால் உமியினால் உண்டபின் மூழ்கலால்
நித்திரைகள் இல்லாமையால்
நீர்பகையி னால்பனிக் காற்றின்உடல் நோதலால்
நீடுசரு கிலையூறலால்

மெல்லிநல் லார்கலவி அதிகம்உள் விரும்பலால்
வீழ்மலம் சிக்குகையினால்
மிகுசுமை யெடுத்தலால், இளவெயில் காய்தலால்
மெய்வாட வேலைசெயலால்

வல்லிரவி லேதயிர்கள் சருகாதி உண்ணலால்
வன்பிணிக் கிடமென்பர்காண்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 30

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

உணவிலே கல்லும் மயிரும் கலந்திருப்பதாலும், அதிக உணவை விரும்பி யுண்பதாலும், கருத்தை வருத்துங் கவலையினாலும், மிக்க தொலைவு நடப்பதனாலும். மலசலங்களை அடக்குவதாலும், மிகக் கனிந்த பழத்தையும் பழங்கறி களையும் உண்பதாலும்,

(உணவில்) நெல்லும் உமியும் இருப்பதாலும், உணவுக்குப் பின் குளிப்பதாலும், தூக்கக் கெடுதியாலும்,
(தன் உடம்புக்கு) ஒவ்வா நீரிலே முழுகுவதாலும், பனி கலந்த காற்றிலே மெய் வருத்துவதாலும், சருகும் இலையும் நீண்டநாள் (குடிக்கும் நீரில்) ஊறிக் கிடப்பதாலும்,

மென்மைத் தன்மையுடைய பெண்களின் சேர்க்கையை மிகவும் மனங்கொண்டு விரும்பி நடப்பதாலும், கழியும் மலம் சிக்குவதாலும், பெருஞ்சுமை தூக்குவதாலும், காலை வெயிலிற் காய்வதாலும், உடல் வாட்டமுற வேலைகள் செய்வதாலும்,

கொடிய இரவிலே தயிரையும் கள்ளையும் கீரைகளைப் போன்ற கறிகளையும் உண்பதாலும் கொடிய நோய்க்கு இடம் உண்டாகும் என்பார்கள்.

விளக்கவுரை:

சருகு ஆதி என்பதனால் இஞ்சி, நெல்லி, பாகற்காய், கஞ்சி ஆகியவற்றைக் கொள்க.

கருத்து:

இங்குக் கூறப்பட்டவைகளை நோய்களின் இருப்பிடம் என்பர் வைத்தியர்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-May-20, 8:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே