குமரேச சதகம் - திருமகள் வாழும் இடங்கள் - பாடல் 35

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கடவா ரணத்திலும் கங்கா சலத்திலும்
கமலா சனந்தன்னிலும்
காகுத்தன் மார்பிலும் கொற்றவ ரிடத்திலும்
காலியின் கூட்டத்திலும்

நடமாடு பரியிலும் பொய்வார்த்தை சொல்லாத
நல்லோ ரிடந்தன்னிலும்
நல்லசுப லட்சண மிகுந்தமனை தன்னிலும்
ரணசுத்த வீரர்பாலும்

அடர்கே தனத்திலும் சயம்வரந் தன்னிலும்
அருந்துளசி வில்வத்திலும்
அலர்தரு கடப்பமலர் தனிலும்இர தத்திலும்
அதிககுண மானரூப

மடவா ரிடத்திலும் குடிகொண்டு திருமாது
மாறா திருப்பள் அன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 35

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

மதயானையினிடத்திலும், கங்கையாற்றிலும் (தூய நீரிலும்), தாமரை மலராகிய பீடத்திலும், திருமாலின் மார்பிலும், அரசரிடத்திலும், ஆனிரையிலும்,

நடையிற் சிறந்த குதிரையினிடத்திலும், பொய் கூறாத நற்பண்புடையவரிடத்திலும், சிறந்த நல்லழகுடைய வீட்டிலும், போருக்குரிய உயர்ந்த வீரரிடமும்,

மிகுந்த வெற்றிக் கொடியினிடமும், திருமணத்திலும், அரிய திருத்துழாயிலும் வில்வத்திலும், மலர்ந்த கடப்பமலரிலும், தேரிலும்,

மிகுந்த நல்ல குணமும் அழகுமுடைய பெண்களிடமும் இலக்குமி குடியாகி நீங்காமல் இருப்பாள்
அல்லவா?

விளக்கவுரை:

கடம் - மதம், வாரணம் - யானை, காகுத்தன் என்பவன் மரபிலே திருமால் இராமனாகப் பிறந்தார். ஆகையாற் காகுத்தன் எனப்பட்டார்.

காலி - பசுமந்தை, கேதனம். - கொடி, சுயம்வரம் : ஒருபெண் தானே தன் கணவனைத் தேர்ந்தெடுத்தல்.
சுயம் - தானாவே, வரம் - வரித்தல், வரிக்கப்பட்டவனை வரன் என்பர்.

துளசி திருமாலுக்கும், வில்வம் சிவபிரானுக்கும். கடம்பு முருகனுக்கும் உரியவை.

மடம் - இளமை, மடவார் - இளம் பெண்கள்.

கருத்து:

யானை முதலான இடங்களில் திருமகள் குடியாக இருப்பாள். (செல்வம் இருக்கும்).

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-20, 11:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே