குமரேச சதகம் - மக்களில் விலங்குகள் - பாடல் 40
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தான்பிடித் ததுபிடிப் பென்றுமே லவர்புத்தி
தள்ளிச்செய் வோர்குரங்கு
சபையிற் குறிப்பறிய மாட்டாமல் நின்றவர்
தாம்பயன் இலாதமரமாம்
வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்குமொரு
வெறியர்குரை ஞமலியாவர்
மிகநாடி வருவோர் முகம்பார்த்தி டாலோபர்
மேன்மையில் லாதகழுதை
சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும்
தூங்கலே சண்டிக்கடா
சூதுடன் அடுத்தோர்க் கிடுக்கணே செய்திடும்
துட்டனே கொட்டுதேளாம்
மாம்பழந் தனைவேண்டி அந்நாளில் ஈசனை
வலமாக வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 40
- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
முற்காலத்தில் மாம்பழத்தை விரும்பிச் சிவபெருமானை வலமாக வந்த முருகனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!
தான் கொண்டதே கொள்கையெனக் கொண்டு பெரியோர் அறிவுரையைக் கேளாது நீக்கிச் செய்வோர் குரங்காவர். அவையிலிருந்து ஒருவருடைய குறிப்பை அறியாமல் நிற்பவர்கள் பயனற்ற மரமாவர்;
வீம்பினால் பிடிவாதமாகச் செல்வாக்கற்ற எளியவர்களை எதிர்ப்பாக்கிக் கொண்டு திரியும் வெறியர் குரைக்கும் நாயாவார்; ஓருதவி எதிர்பார்த்து தங்களை மிகவும் விரும்பி வருவோரின் முகத்தையும் நோக்காத உலுத்தர்கள் இழிந்த கழுதையாவார்;
சான்றோர் அவையிலே சோம்பிப் படுத்திருக்குந் தூங்குமூஞ்சி சண்டித்தனமுள்ள எருமைக்கடா; தன்னை நம்பி வந்தவர்களுக்கு வஞ்சகமாகத் துன்பமே செய்திடும் கயவன் கொட்டுகின்ற தேளாவான்.
அருஞ்சொற்கள்:
ஞமலி – நாய். இடுக்கண் - துன்பம்.
மாம்பழக்கதை
சிவபிரான் கையில் ஒரு சிறந்த மாம்பழம் இருந்தது. அதைப் பெறச் சிறுவர்களான கணபதியும் முருகனும் போட்டியிட்டனர். ‘யார் இவ்வுலகை முதலில் சுற்றி வருவார்களோ அவர்களுக்கே இந்த பாம்பழம்' என்றார் பரமனார். முருகன் உடனே விரைந்து மயிலேறி உலகைச் சுற்றி வரப் போய் விட்டார். கணபதி சிறிது சிந்தித்துத் தம் தந்தையே உலகம் என்ற உண்மையை உணர்ந்து, தந்தையைச் சுற்றிவந்து மாம்பழத்தைப் பெற்றுக் கொண்டார். பின் வந்த முருகன் தாம் ஏமாற்றப்பட்டதாக எண்ணிப் பிணங்கிப் கைலையை விட்டு வந்து விட்டார், அவரை மகிழ்விக்கவே சிவபெருமான் அவரைப் ‘பழம்நீ' அன்றோ என்று தேற்றினார். ‘பழம்நீ' என்பதே ‘பழநி' என மருவியது. இவ்வாறு புராணம் கூறுகிறது. ஆனால், இந்நூலாசிரியர் ‘ஈசனை வலமாக வந்த முருகா!' என்கிறார்.
கருத்து:
பெரியோர் சொல்லைக் கேட்க வேண்டும். அவையிலே குறிப்பறியுந் திறமை வேண்டும்.
எளியாரை எதிரிட்டுக் கொள்ளக்கூடாது. ஈகைப் பண்பு வேண்டும்.
பெரியோர் அவையிலே துயிலக் கூடாது. அடுத்தவரைக் கெடுத்தல் ஆகாது.