காதலர்தின சிறப்புக் கவிதை

காதலர்தின சிறப்புக் கவிதை – செவல்குளம் செல்வராசு
குவிகம் மாத இதழில் பிப்ரவரி 2020 பிரசுரமான கவிதை


அங்கு ஏதோ ஒரு
அரசனின் புகழை நிலைநாட்ட
அரண்மனை கட்டும் பணி
நடக்கிறது போலும்…
எங்கு நோக்கினும்
வடித்து முடிக்கப்பட்ட அழகிய சிற்பங்களும்
சிற்பிகள் செதுக்கிக் கொண்டிருக்கும்
அரைகுறை சிற்பங்களும்
இன்னும் செதுக்கத் துவங்காத
சிலைகளுக்கான பெரிய பாறைகளும்
எண்ண முடியாத அளவில்
எத்தனையோ யானைகளும்
கட்டுமானப் பணியிலிருக்கும்
கணகற்ற அடிமைகளும்
மேற்பார்வையில் இருக்கும்
அரசாங்க மந்திரிகளும்

இன்னும் நினைவிலில்லாத
எத்தனையோ காட்சிகள்…
சற்று தொலைவில்
இயற்கையும் பிரமிக்கும் அழகில்
பேரழகி சிலை ஒன்று
என்ன இது…? !!
துண்டிக்கப்பட்ட கை கட்டை விரல் ஒன்றும்
சற்று நேரத்திற்கு முன்னால் சிந்தி
இன்னும் உறையாத குருதியும் மண்ணில்
எந்த சிற்பியுடையதென்று தெரியவில்லை
இன்னும் சற்று தொலைவில்
உதிர்ந்த சில முடிகளும்
உடைந்த சிலவளையல் துண்டுகளும்
அறுந்து சிதறிய சில
பாசி மணிகளும் பரவிக்கிடந்தன
அடையாளம் கண்டுவிட்டேன்
நிச்சயமாய் இது உன்னுடையது தான்…
மனம் வெடித்து உயிர் பதைத்து
ஓடுகிறேன்…ஓடுகிறேன்…
நண்பன் உதைத்து
உறக்கம் கெடுத்து விட்டான்
கனவும் கலைந்து விட்டது

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (7-Jun-20, 12:27 pm)
பார்வை : 49

மேலே