ஊடகம்

வீடு முதல் காடு வரை
கருவிகளின் துணையுடனே
காற்றினிலே கரைந்து வந்து
நிம்மதியை ஒழித்துக்கட்டும்!

உண்மைதனை ஊமையாக்கும் விந்தையான வித்தை கொண்டே பை நிறைய கையை நீட்டி
கேட்பவனைக் கிறுக்கனாக்கி
படிப்பவனை மடையனாக்கி
பார்ப்பவனைப் பதரச் செய்யும்
நாளுக்கொரு நிறமிருக்கும்
பொய் மையிலே செய்தி செய்தாய்!

நாடறியும் மூடர்களை
சான்றோரின் வேடத்திலே
தானியற்றும் நாடகத்தில்
ஊரார்க்குப் பாடஞ்சொல்வாய்!

முதலைக்கொண்ட முதலாளியின்
முதலைப்பசிப் போக்கிடவே
நஞ்சனைத்தும் அமிர்தமென்று இடைவெளியில் இடைவிடாது
நயமுடனே நடிகர்கொண்டு
விளம்பரத்தில் விதைத்திடுவாய்!

கட்டுக்கட்டாய் நோட்டை ஈட்ட
போட்டி போட்டுக் கூட்டம் சேர்த்து மேடையேறி கூத்துகட்டும்
வேடிக்கையை போட்டுக்காட்டி
கேடுகெட்டக் கூட்டத்திற்கு
வெறும் பெருமை சேர்த்து வைப்பாய்!


தலைசிறந்த தலைவர்களும்
தலைமறையும் தலைமுறையில்
திரைமறைவில் ஒளிந்திருக்கும்
தரமிழந்தத் தருதலையை திறம்படைத்தத் தலைவரென்றே
தவறுதலாய் திரித்திடுவாய்!

நீ நடத்தும் நாடகத்தை
தினம் ருசிக்கும் ரசிகர்களை
போதை கொண்ட பேதைகளாய் அடிமையாக்கி அடி பனித்தாய்!


கோடியுள்ள கேடிகளின்
தேர்தல் வழித் திருடர்களின்
சாதிமதக் குருடர்களின்
மூளையற்ற
முரடர்களின் ஆசையுள்ள மீசைகளின்
கேடு கெட்ட கருமங்களை தட்டிக்கேட்க தயங்குகின்றாய்!

தேவையற்றக் காரியத்தைச் சேவையாகச் செய்திடுவாய்!
பொறுப்புள்ள செய்திகளை விருப்பமற்றுக் கடந்திடுவாய்!

பிள்ளையைக் கிள்ளிவிட்டு
தொட்டிலை ஆட்டிவிட்டு
நல்லவன் போல் நீ நடிப்பாய்!

இதன்மூலம் நாமுணரும் நல்லசேதி
என்னவென்றால்
புரையுடைய பொருளையெல்லாம் புறந்தள்ளும் பண்புகளே மனமுடைய மனிதர்களின் மதியுடைய முடிவாகும்!

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (26-Jun-20, 11:14 am)
பார்வை : 64

மேலே