குமரேச சதகம் – திருவருள் சிறப்பு - பாடல் 67
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருமகள் கடாட்சம்உண் டானால் எவர்க்கும்
சிறப்புண்டு கனதையுண்டு
சென்றவழி யெல்லாம் பெரும்பாதை ஆய்விடும்
செல்லாத வார்த்தைசெல்லும்
பொருளொரு துரும்புமரி யாதைஆம் செல்வமோ
புகல்பெருக் காறுபோல் ஆம்
புவியின்முன் கண்டுமதி யாதபேர் பழகினவர்
போலவே நேசம்ஆவார்
பெருமையொடு சாதியில் உயர்ச்சிதரும் அனுதினம்
பேரும்ப்ர திட்டையுண்டாம்
பிரியமொடு பகையாளி கூடவுற வாகுவான்
பேச்சினிற் பிழைவராது
வருமென நினைத்தபொருள் கைகூடி வரும்அதிக
வல்லமைகள் மிகவும்உண்டாம்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 67
- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!
யாவருக்கும் இலக்குமியின் அருள் ஏற்பட்டால் கீர்த்தியுண்டு; பெருமை உண்டு; போன நெறி யாவும் எவரும் பின்பற்றும் பெரிய நெறியாகிவிடும்; ஏற்றுக் கொள்ளத் தகாத சொற்களும் (பிறரால்) ஏற்றுக் கொள்ளப்படும்;
எப்பொருளும் எளிதிற் கிடைக்கும்; பிறர் போற்றுஞ் சிறப்புக் கிடைக்கும்; செல்வமும் (பிறர்) புகழ்ந்து கூறும் (அளவில்) வெள்ளம் மிகுந்த ஆற்றைப்போல (வடியாது) பெருகும்; உலகில் தாம் வறியராயிருந்த போது பார்த்து மதிப்புக் கொடாதவர்களெல்லோரும் (இப்போது) பழகியவர் போல நட்புக் கொள்வர்;
சாதியிலும் மேன்மையும் உயர்வும் உண்டாகும்; எந்நாளும் புகழும் வரவேற்பும் கிடைக்கும்; பகைவனும் அன்போடு நட்புக் கொண்டாடுவான்; பேசும் போது பிழையில்லாத பேச்சு வரும்;
வரவேண்டு மென்று எண்ணிய பொருள் தவறாமற் கிடைக்கும்; எடுத்த தொழிலை முடிக்கும் பேராற்றல் மிகுதியாக உண்டாகும்.
அருஞ் சொற்கள்:
பிரதிட்டை - வரவேற்பு, பெருக்கு - வெள்ளம், திரு - செல்வம், செல்வத்தின் தெய்வம் திருமகள்.
கருத்து:
திருமகளின் அருளால் யாவும் கிடைக்கும்.