பிசாசின் தனிமை
_________________
இறுதியில் அப்பிசாசு
தனிமை கொண்டது.
கடல்நுரையில் பூத்த
கனவுக்குள் முடிந்தது
பிசாசின் தேடல்கள்.
ஒரு சொல்லில்
உயிர் கொண்டு எழுந்து
மறு சொல்லில்
உயிர் மடியும் முன்னர்
அலைகிறது பிசாசு.
கடல் பள்ளங்களில்
உயிர் சிந்தியபடி
அவளுக்கென நிற்கிறது
ஏதேதோ சிந்தித்து...
இரவை பிளக்கும்
அவள் சொற்களை
கத்தரித்து நடுகிறது
பகலின் கன்னத்தில்.
அவள் மழையில்
நனைந்து
கடலோடு கலந்து
மிதக்கலாம் மேகமாய்
மலை முகடினில்
கண்ணீர் பெருகியோட.
பிசாசு கவிதைகளை
பாட்டிலில் அடைத்து
கடலுக்குள் எறிகிறது
இன்றாவது அவள்
இதை படிக்கட்டுமென.
________________