குமரேச சதகம் – இடுக்கண் உற்றும் பயன்படுபவை - பாடல் 79

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆறுதண் ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்
அமுதபா னம்கொடுக்கும்
ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்
அப்போதும் உதவிசெய்வன்

கூறுமதி தேய்பிறைய தாகவே குறையினும்
குவலயத் திருள்சிதைக்கும்
கொல்லைதான் சாவிபோய் விட்டாலும் அங்குவரு
குருவிக்கு மேய்ச்சலுண்டு

வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும்
மிகநாடி வருபவர்க்கு
வேறுவகை இல்லையென் றுரையா தியன்றன
வியந்துளம் மகிழ்ந்துதவுவான்

மாறுபடு சூரசங் காரகம் பீரனே
வடிவேல் அணிந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 79

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

பகைத்த சூரனைக் கொன்ற வீரனே! கூரிய வேலை யேந்திய முருகனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

தண்ணீர் வறண்டு போயினும் ஆறு தன் ஊற்றினாலே இனிய குடிநீரைத் தரும்; கதிரவனுடைய அரைப்பகுதியைப் பாம்பு மறைத்தாலும் அந்நிலையிலும் கதிரவன் ஒளி தருவான்;

சொல்லப்பட்ட திங்கள் தேய்பிறையாகக் குறைந்தாலும் உலகிலுள்ள இருளை ஓட்டும்; புன்செய் நிலம் விளைவின்றிப் பட்டுப் போனாலும் அந்நிலத்திற்கு வரும் குருவிகளுக்குத் தீனி கிடைக்கும்;

சிறப்புடன் கொடுப்போன் வறுமையுற்றாலும் சாலவுந் தேடி வருவோர்களுக்கு இல்லையென்று கூறாமல் வேறுவகையிலே முடிந்த பொருள்களை வியப்புறும்படி மனங்களித்துக் கொடுப்பான்.

விளக்கவுரை:

ஞாயிற்றை இராகு எனும் பாம்பு மறைப்பதாகக் கூறுவது புராணக்கதை.

கட்செவி - பாம்பு (கண்ணே செவியாகவுமுடையது);

கொல்லை என்பது முல்லை நிலம்: இக்காலத்திற் புன்செய் என்கிறோம்.

காடும் காடுசார்ந்த இடமும் முல்லை.

உதாரி - கொடையாளி, உதாரம் - கொடை, மிடி - வறுமை.

‘வியந்து' என்பதற்கு ‘வியக்க' எனப் பொருள் கூறல் வேண்டும்.

கம்பீரம் - வீரத்தோற்றம்

‘இலன்என்னும் எவ்வம் உரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள'

என்பது குறள்.

கருத்து:

கொடைப்பண்புடையோர் தம் உயிரையும் ஈவரே ஒழிய இல்லையென்று இயம்பார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jul-20, 7:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே