குமரேச சதகம் – நற்புலவர் தீப்புலவர் செயல் - பாடல் 83
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மிக்கான சோலையிற் குயில்சென்று மாங்கனி
விருப்பமொடு தேடிநாடும்
மிடைகருங் காகங்கள் எக்கனி இருந்தாலும்
வேப்பங் கனிக்குநாடும்
எக்காலும் வரிவண்டு பங்கே ருகத்தினில்
இருக்கின்ற தேனைநாடும்
எத்தனை சுகந்தவகை உற்றாலும் உருள்வண்
டினம்துர் மலத்தைநாடும்
தக்கோர் பொருட்சுவை நயங்களெங் கேயென்று
தாம்பார்த் துகந்துகொள்வார்
தாழ்வான வன்கண்ணர் குற்றமெங் கேயென்று
தமிழிலா ராய்வர்கண்டாய்
மைக்காவி விழிமாது தெய்வானை யும்குறவர்
வள்ளியும்,த ழுவுதலைவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 84
- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
மை தீட்டப் பெற்ற குவளை மலர்போன்ற கண்களையுடைய தெய்வயானையாரும், வேடர்மகள் வள்ளியம்மையாரும் தழுவும் தலைவனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!
பலவகை மரங்கள் மிகுந்த சோலையிலே மாங்கனியையே குயில் விருப்பத்தோடு தேடியடையும்; கூட்டமான காகங்கள் எந்தப் பழங்கள் இருந்தாலும் வேப்பம் பழத்தையே தேடும்;
எப்போதும் புள்ளிகளையுடைய வண்டுகள் தாமரை மலரிலுள்ள தேனைத் தேடும்; எத்துணை நறுமணக் கலவைகள் இருந்தாலும் உருண்டு செல்லும் வண்டுக் கூட்டம் புன்மணமுடைய மலத்தையே தேடும்;
ஆகையால், நல்ல புலவர்கள் பொருளின் சுவையும் அழகும் எங்குள்ளன என்று விரும்பித் தேடித் தெரிந்து கொள்வார்கள்; இழிந்த கொடும் புலவர்கள் தமிழ்ப் பாக்களிலே குற்றம் எங்கேயென்று தேடுவர்.
அருஞ்சொற்கள்:
பங்கேருகம் - தாமரை, சுகந்தம் - நறுமணம், வன்கண்ணர் - கொடியவர்,
கருத்து:
குணத்தைக் கொள்ளவேண்டும்; குற்றத்தை நீக்க வேண்டும்.