உயிர் நீ உற்ற உறவும் நீ

உயிர்நீ உற்ற உறவுநீ கந்தா
கயிலை வாழ்முக் கண்ணன் புதல்வா !
மயில்வா கனனே வள்ளி மணாளா
துயரறுத் திடவே துடிப்புடன் வாராய் !

தஞ்ச மடைந்தோர் தவிப்பினை யுணர்ந்து
குஞ்சரி நாதா குறைகளைக் களைவாய் !
அஞ்சே லென்றே அபய மளித்து
நெஞ்சம் குளிர நிறைநலங் கொடுப்பாய் !

அச்சங் கூட்டி அமைதியைக் குலைக்கும்
இச்சை கொண்டே இன்னுயி ரெடுக்கும்
நச்சுத் தொற்றினை நசுக்கிப் போடப்
பச்சை மயிலில் பரிவாய் வருவாய்!

பாரின் நிலையைப் பன்னிரு விழிகளால்
பார்த்த பிறகும் பாரா முகமேன்?
ஈரறு கைகளில் ஏந்தி வந்து
கூர்வே லாலே குத்திக் கிழிப்பாய்!

தீயன பொசுக்கும் சேவற் கொடியோய்
மாயத் தொற்றை மறையச் செய்வாய் !
நோயில் விழுந்தோர் நொந்துவா டாமல்
தாயின் பரிவுடன் தலைகோ திடுவாய் !

இடிபோல் தாக்கி இதயம் நிறுத்தித்
துடிக்கத் துடிக்கச் சுற்றத் தினரழ
எடுத்துச் செல்லும் எமனாம் கொரோனா
பிடியில் விழாது பெருமான் காப்பாய் !

உன்னை யன்றி உள்ளம் யாரையும்
என்றும் துணையாய் ஏற்க நினையுமோ ?
பன்னிரு விழிகளுள் பரிவா யெமக்காய்
ஒன்றைத் திறந்தால் உய்வோம் யாமே !

அண்டமும் குலுங்க அதிரடி யாகக்
கிண்கிணி யொலிக்கக் கிளர்ந்தெழு வாயே !
மண்ணுல குய்ய வடிவே லழகா
விண்ணைத் தாண்டி விரைந்து வாராய் !

வறியோர் துன்பம் மாற்றப் புறப்படு
சிறியோர் பெரியோர் சீர்பெறச் செய்திடு
அறியாப் பிள்ளை அழைப்பது கேட்டதும்
குறைகள் களையக் குமரா வருக !

ஒருகழல் சற்றே உயர்த்தி மிதித்தால்
உருதெரி யாமல் ஒழியும் நுண்மி!
வருவாய் முருகா வந்தருள் புரிவாய்
தருவாய் நிம்மதி தரணியி லெமக்கே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Aug-20, 1:57 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 68

மேலே