பிரியாணி இரவு

================
கனவுகள் உறங்காத
உறக்கத்தின் பெருவெளி எங்கும்
கதறிக்கொண்டே வருகிறது
வளர்த்த ஆடு.

நகம்வெட்டப் பீரிட்ட
குருதியைக் கண்டதும்
துடித்துப்போய்
பிள்ளையை வைத்தியரிடம்
தூக்கிக்கொண்டுபோன நீதானா
பிள்ளைபோல் வளர்த்த என் கழுத்தில்
கத்தியை வைத்தாய் என்று
என் மனத்தின் கழுத்தினில்
தன் கேள்விக் கத்தியை அழுத்தி
அறுத்து வலிக்கச் செய்தது அது

உரித்தத் அதன் தோலைப்போல்
மனசாட்சியைத் தூக்கி
சுவரில் தொங்கவிட்டு
துண்டுதுண்டாய் வெட்டியப்
பாகங்களாய் வேகும் அதன்
இறைச்சிக்கு அடுப்பாகிப்போன
நித்திரையில் சூடேறும் என்
பாத்திரம் சூடு தாளாமல் தவிக்கிறது

எல்லாப் பாகங்களும்
அடுப்பேற்றப்பட்டதும் எஞ்சிய
நிலையில் என்னைப் பார்த்துச்
சிரித்தபடி கேலி செய்யும்
அதன் தலையை கண்முன் தோன்றி
என் தலையை
எக்கத்திக்கு இரையாக்குவதென்ற
கேள்விக் கணைதொடுக்க
தூங்கவும் முடியாத
விழிக்கவும் தெரியாத
அவஸ்தையாய் கொல்கிறது
ஒரு அப்பிராணியை
பிரியாணியாக்கிய இரவு.
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Aug-20, 1:57 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : biriyaani iravu
பார்வை : 72

மேலே