பட்டாம் பூச்சி

பட்டாம் பூச்சி!

தன் சிறகமர்ந்த வண்ணங்களை
என் கண்ணூற்றிக்
கவிழ்த்தியதால்
சாயமேறி மிளிர்கின்றன
என் எண்ணக் கீற்றுகள்!

அதன் மென் பட்டு
மெய் தழுவிய
என் பார்வைகள்
எழுதுகின்றன
என் அழகியலின்
ஆரம்ப அத்தியாயத்தை!

காதலின்
நிச்சய ஓலையை எனக்குப்
படித்துச் சொல்வதாய
என் காதல் நெஞ்சத்தில்
சிறகடிக்கும்
பட்டாம் பூச்சிகளின் ரீங்காரம்!

என் சோகப் பொழுதுகளின்
பாரங்களை
அதன் முதுகேற்றிய
என் விழிகளுக்கு
இறகுகளாகிப் போகிறது
என் இமைகளின் சடுதி மாற்றம்!

அது வந்து சென்ற
வான் தடங்கள் எங்கும்
தேன் தெளித்து வைத்தாற் போல்
ஓர் தித்திப்பில் ஊற வைக்கின்றன
கண்களுடன் மனத்தையும்
மறுதலிக்கவைத்து!
சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (6-Sep-20, 12:23 pm)
Tanglish : pattaam poochi
பார்வை : 273

மேலே