ஒரு யாழ் மீட்டும்

ஒரு யாழ் மீட்டும்.
________________________________ருத்ரா

உன்னைக் காதலிக்கிறேன்
என்று சில சொற்களை உதிர்த்துவிட‌
பெருந்தயக்கம் எனக்கு.
அதன் அந்த
"இலை யுதிர் காலத்தின்"
நீண்ட கொடும்பனியில்
வாடிக்கிடக்க வேண்டுமே.

உன்னிடம்
ஒரு மலர்ச்செண்டில்
என் இதயம் தைத்து
கொடுக்கவும் கொள்ளை விருப்பம்.
ஏதொ நினைப்பில் அது
குப்பைக்கூடையில் விழுந்து விட்டால்
அந்த குப்பைக்கூடையில்
போய் நைந்து விழுவதும்
உன் இதயம் அல்லவா.
உன் இதயம் என் இதயமாய்
மாறிப்போனது
அந்த இதயங்களுக்கு மட்டும் தானே
தெரியும்.

சரி
ஒரு கடிதம் மூலம்
எழுதி தெரியப்படுத்தி விட கொள்ளை ஆசை.
அதற்கு
ஒரு தாமரையிலையில்
மயில் பீலியைக்கொண்டு
வருடிச்சொல்ல
நான் "சாகுந்தல"க்காளிதாசனை அல்லவா
தேடி ஓட வேண்டும்.
என் வசம் இருக்கின்ற‌
அந்தக் காகிதத்தை எடுத்துவிட்டேன்.
நிப்பு முனை கொண்டு கீற‌
மனம் ஒப்பவில்லை.
அந்த காகிதம் முழுவதும்
இந்த அகன்ற வானம் அல்லவா.
எந்த நட்சத்திரங்களை
எழுத்துக்களாக அதில் நான்
தொங்க விடுவது?
அந்த மினுக்கு ஒளியில் எல்லாம்
உன் "க்ளுக்"ஒலிகள் கேட்டு
திகைக்கின்றேன்.

நீயாகவே தெரிந்து கொள்
என் காதலை.
அந்த நம்பிக்கை இந்நேரம்
உன்னுள்
ஒரு யாழ் மீட்டும்.
ஆம்.
நிச்சயமாய்
ஒரு யாழ் மீட்டும்.

___________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (21-Sep-20, 12:20 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : oru yaal meettum
பார்வை : 92

மேலே