வெறி விலக்கல் - நேரிசை வெண்பா
ஒரு பெண் காதல் நோயினால் உடல் மெலிந்தாள். அவள் தாய் தெய்வக் குற்றம் என்று அதனைக் கருதினாள், தெய்வத்துக்கு பலியிட்டுப் போற்றவும் முற்பட்டாள். அப்போது, மகள் தோழியிடத்திற் கூறுகிற பாங்கிலே அமைந்த செய்யுள் இது.
நேரிசை வெண்பா
முந்நான்கில் ஒன்றுடையான் முந்நான்கில் ஒன்றெடுத்து
முந்நான்கில் ஒன்றின்மேல் மோதினான் - முந்நான்கில்
ஒன்றரிந்தால் ஆகுமோ ஓஓ மடமயிலே
அன்றணைந்தான் வாராவிட் டால்! 187
- கவி காளமேகம்
பொருளுரை:
பன்னிரு இராசிகளிலே ஒன்றான மீனைத் (மகரம்) தன் கொடியாக உடையவனான மன்மதன், பன்னிரு இராசிகளிலே ஒன்றான (தனுசு) வில்லினை எடுத்து, பன்னிரு இராசிகளில் ஒன்றாகும் கன்னியாகிய என்றன் மீது மோதி விட்டனன், ஒஓ! அழகிய மயிலனைய தோழியே! அந் நாளிலே என்னைத் தழுவிய என் காதலன் வாராவிட்டால், பன்னிரு இராசிகளுள் ஒன்றான மேடத்தை (ஆட்டை) அரிந்து பலியிட்டால் மட்டும் என் நோய் நீங்கிப் போகுமோ? நீங்காது என்பது கருத்து.