எட்டுக்கல் மூக்குத்தி
எட்டுக்கல் மூக்குத்தி
மூக்கினைக் குத்தி
மெய் நோய் போக்கும்
தேர்ந்த உத்தி!
நாசிதனை
மெல்லத் தொட்டு
நங்கை மனதோடு
பேசிடும் பொற்தட்டு!
கற்கள் எழுப்பிய
ஒளிரும் ஓவியம்!
கண் கூசப் பேசிடும்
கலையின் காவியம்!
பாரம்பரியம் கடத்திடும்
கடத்தி!
பார்ப்போர் மனம் குளிர
வைத்திட பொற்தீ!
பெண்மை பறைசாற்றிடும்
சின்னம்!
பண்பாட்டினைக் காத்திடும்
பொற்கிண்ணம்!
இதயம் கல்லாகியதால்
பேசிடும் பொற்பூ
உதயம் இல்லாப் பொழுததிலும்
வீசிடும் ஒளி அம்பு!
மூத்தோர் அறிவால்
எழுதிய கலையே
எழுத இயலா
அழகின் விலையே!
சு.உமாதேவி