மருத்துவ வெண்பா – பீர்க்கங்காய் - பாடல் 76
நேரிசை வெண்பா
தின்றவுடன் பீர்க்கங்காய் சீதமுறுங் காண்,பித்தம்
ஒன்றுமூன் றாக வுயருமே – மன்றலணிக்
காரளகக் கச்சுமுலைக் காரிகையே வாதகப
நேரளவைத் தாண்டு நினை!
- மருத்துவ குண விளக்கம்
குணம்:
பீர்க்கங்காயை உண்ணில் சீதளமும் பித்தமும் தன் மாத்திரைக்கு மேல் மூன்று பங்கு அதிகரிக்கும். வாத கபங்கள் தத்துவ நிலை பிசகும்.
உபயோகிக்கும் முறை:
இதனை மேற்றோலைச் சீவி, வில்லை வில்லையாக அரிந்து பொறியலாகவும், சிறு துண்டுகளாக அரிந்து, கடலைப் பருப்புடன் கூட்டிக் கூட்டமுதமாகவும் செய்து அன்னத்துடன் கூட்டி உண்பதுண்டு. இது பித்த சீதளத்தை அளவுக்கு மிஞ்சி விளைவிக்கும். பீக்கங்கா மேல்தோலைச் சீவித் துவையலாகவும் அரைத்துச் சாதத்தில் பிசைந்தும், மோர்ச் சாதத்தில் தொட்டுக் கொண்டு சாப்பிடவுஞ் செய்யலாம்.