செய்தியால் வந்த வருத்தம்

செய்தியால் வந்த வருத்தம்

யாராவது என்னை இவனிடமிருந்து காப்பாத்துங்களேன் ! எதிர்பார்த்து எல்லோர் முகத்தையும் பார்த்தேன். ஒருத்தராவது வரணுமே ! ஹூஹூம் அப்படியே எனக்கு எப்பொழுது அடி விழும் எனறு எதிர்பார்த்திருப்பது போல் நின்று கொண்டிருந்தார்கள். அப்பாடி !.. அவனே என் சட்டையை விட்டு விட்டு முகத்தின் மீது குத்துவதற்காக வைத்திருந்த கையை தாழ்த்தி விட்டான். போய்த்தொலை ! இந்த வார்த்தையை உதிர்த்து விட்டு விலகி சென்று விட்டான்.
ஒரு பெருமூச்சு விட்டு அப்பாடி தப்பித்தேன் என்றவன் தோளை குலுக்கி சுற்றி உள்ளவர்களை பார்த்தேன். அவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் காணப்பட்டது தெரிந்தது. அடிக்காமல் விட்டு விட்டானே என்ற ஏமாற்றம்தான் கண்களில் தெரிந்தது. எனக்கு புரிந்தது. “போங்கடா நீங்களும்”…என்பது போல பார்த்து விட்டு வேகமாக நடையை கட்டினேன். இவர்கள் அனைவருமே என்னை அடிப்பதை ஆவலாக காண்பதற்கு காரணம் இருக்கிறது. அது என் தொழில் சம்பந்தபட்டது.
நான் ஒரு பத்திரிக்கை நிருபர் என்று சொல்லிக்கொள்கிறேன். ஆனால் எந்த பத்திரிக்கையும் என்னை நிருபராக அங்கீகரிப்பதில்லை காரணம் அவ்வப்பொழுது நான் கொடுக்கும் கிசு கிசு தகவல்களை கொடுத்து பணம் சம்பாதித்து கொள்கிறேன். அதற்கு மட்டும் என்னை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். எனக்கும் இதுதான் பிடித்திருக்கிறது. இந்த வேலை சாதாரண வேலையில்லை.
எப்பொழுதுமே ஒருவர் நல்லவராக இருக்க முடியாது. இது என்னுடைய கோட்பாடு. இதுதான் என்னுடைய தொழிலுக்கு பலமே. உலகத்தில் எல்லோருமே நல்லராக இருக்க முடியாது. அது போல எல்லோரும் கெட்டவர்களாக இருக்க முடியாது. நீங்கள் ஒழுங்காக வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டு வந்தால் அது செய்தியா? உங்களை மெதுவாக பின் தொடர்ந்து ஏதோ ஒரு கட்டத்தில் சிறு தவறை செய்து விட்டீர்கள் என்றால் அது என்னைப் போன்றவர்களுக்கு வருமானம் தரும் செய்திதானே. இதைத்தான் நான் செய்கிறேன்.
ஆனால் இது மக்களுக்கு பிடிக்கமாட்டேனெங்கிறது. ஆனால் ஒன்று சொல்கிறேன் இந்த மக்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இப்பொழுதெல்லாம் பத்திரிக்கையில் என் பெயர் வந்து விட்டதே என்று நிறைய பேர் கவலைப்படுவது இல்லை அதனால் அவர்களுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து கூடிவிட்டதாகவே நினைக்கிறார்கள். நம் மக்கள் முடிந்தால் அவர்களை தலைவர் அந்தஸ்துக்கு கொண்டு செல்ல தயாராகவே இருக்கிரார்கள். ஆரம்பத்தில் என்னால் பாதிக்கப்பட்டவர்கள் என்னை அடிப்பதற்கு கூட ஆள் வைத்த்துண்டு. அதன் பின் அவர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்கும் அந்தஸ்தை கண்டு நன்றி சொல்லிவிட்டு போனவர்களும் உண்டு.
ஒரு காலத்தில் தன் பெயர் வெளி வந்து விட்டதே என்று கவலையால் துவண்டு போனவர்கள் உண்டு. இன்று அவர்களுக்குத்தான் சமுதாயத்தில் மதிப்பு. சரி கதைக்குள் நுழைவோம்.
என்னை அடிக்க வந்தவன் பெயர் முருகன். ஊர் திருநெல்வேலி பக்கம், நல்ல பையன் தான் ஆரம்பத்தில் ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்து ஓட்டுநர் தொழில் கற்று அதன் பின் மெல்ல மெல்ல முன்னேறி இன்று நடிகை வாணி அவர்களுக்கு ஓட்டுநர் மற்றும் பாதுகாவலனாக இருக்கிறான். நடிகை வாணி மிக நல்ல பெண்தான். ஆரம்பத்தில் மிக நல்லவளாக இருந்தவளை நான் என் தொழில் திறமையால் பத்திரிக்கையில் பெயர் வரும்படி செய்து விட்டதால் மிக வருத்தமுற்று என்னை நன்றாக திட்டி விட்டார்கள். ஆனால் அதன் பின் அவர்கள் மார்கெட் ஏறுமுகமாகி நல்ல நிலைமைக்கு சென்று விட்டதால் என்னிடம் மன்னிப்பு கேட்டு நண்பனாக்கிக் கொண்டார்கள்.
அவர்களிடம் முருகன் இருந்ததால் எனக்கு ஒன்றும் நட்டமில்லை. மிக நல்ல பையன், ஒரு முறை எங்கோ வெளியில் செல்லும் போது கையில் கணக்கு காட்ட முடியாத பணம் வைத்திருந்ததாக ரோந்து சென்ற காவல்துறையிடம் சிக்கிக்கொண்டான். அந்த செய்தி என் காதுகளுக்குத்தான் கிடைக்க வேண்டுமா ? சாதாரண முருகன் காவல் துறையிடம் சிக்கிக்கொண்டால் அது செய்தியல்ல. புகழ்பெற்ற நடிகையின் ஓட்டுநர் மாட்டுவதுதானே செய்தி. அதற்குத்தான் என்னை அடிக்க வந்து விட்டான்.
காலம் கொஞ்சம் வேகமாகத்தான் ஓடுகிறது. இந்த நிகழ்ச்சி நடந்து மூன்று மாதங்கள் ஓடியிருந்தது. ஒரு நாள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த பொழுது ஏதேச்சையாக முருகணை பார்க்க நேர்ந்தது. எங்கோ வேக வேகமாக சென்று கொண்டிருந்தான். ஒரு குறுகுறுப்பு இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறான் ? தொழில் மூளை சுறு சுறுப்படைந்து, நல்ல வேளை, பஸ் நிறுத்தம் அடுத்தே இருந்தது. பஸ்ஸை விட்டு இறங்கி அவனை கண் பார்வையில் வைத்து மெல்ல பின் தொடர்ந்தேன்..அரை பர்லாங் நடந்தவன் ஒரு திருப்பத்தில் இருந்த வீட்டு காம்பவுண்ட் கேட்டை மெல்ல தட்டினான். கதவு திறந்த்து. உள்ளே இருந்தவர் இவனை கண்டவுடன் உள்ளே அழைக்க இவன் நுழைவது தெரிந்தது.
நான் காத்திருக்க ஆரம்பித்தேன் ஒரு மணி நேரம் கழித்து இவன் வெளியே வர கதவு உடனடியாக சாத்தப்பட்டது. வெளியே வந்தவன் விறு விறுவென நடக்க ஆரம்பித்து பேருந்து செல்லும் பாதைக்கு வந்தான். அங்கிருந்த பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க ஆரம்பித்தான்.நானும் காத்திருந்தேன். காத்திருப்பது என்பது என் தொழிலுக்கு முக்கியமானது என்பதால் நான் அதிகம் சிரமப்படவில்லை. பஸ் ஏறியவன் அவன் இறங்கிய இடத்தை பார்த்தவுடன் கண்டு பிடித்து விட்டேன். நடிகை வாணி அவர்களின் வீடு அங்குதான் இருக்கிரது. வீட்டை நோக்கி நடந்தவனை மெல்ல “முருகா” என கூப்பிட்டேன். திரும்பி என்னைபார்த்தவன் முகம் மாறி, சகஜ நிலைக்கு வந்தது என்ன நாரதரே எப்படி இருக்கறீங்க? கேட்டவனின் முகத்தில் நையாண்டி. நானும் பதிலுக்கு முருகா இந்த நாரதரின் கலகம் நன்மையில்தான் முடியும் தெரிந்து கொள்.
என் விசயத்துல அப்படி ஒண்ணும் தெரியலையே ? இப்ப கூட பாரு நீ எங்கிருந்து வர்றேன்னு என்னால் சொல்ல முடியும், ஆனா உன்னை இனிமேல் தொந்தரவு பண்ண வேண்டாமுன்னு நினைக்கிறேன். மெல்ல பீடிகை போட்டேன். என் பீடிகையை தெரிந்து கொண்டவன் வேண்டாம் சார், இந்த பிரச்சினையை கண்டுக்காம விட்டுடுங்க, ஏற்கனவே என்னைப்பத்தி கன்னா பின்னான்னு நியூஸ் வந்ததுல மேடம் ரொம்ப அப்செட் ஆயிட்டாங்க. தயவு செய்து இதை எல்லாம் பெரிசு பண்ணாதீங்க, எலி தானாக வலையில் மாட்டிக் கொள்கிறது, தயார்ப் படுத்திக்கொண்டேன். இதை பத்தி மூச்சு கூட விடமாட்டேன், தைரியமா சொல்லு.
என் கூட வாங்க, என்று அவன் முன்னர் சென்ற இடத்துக்கு ஒரு ஆட்டோவை கை தட்டி அழைத்து ஏறச்சொன்னான். ஆட்டோவை கொஞ்சம் தள்ளி நிறுத்த சொன்னவன் முன்னர் சென்றபடியே என்னையும் அழைத்து அந்த வீட்டின் கதவை தட்டினான். கதவு திறக்கப்பட்டதும் திறந்தவர் அவனைப் பார்த்து பின் அருகில் என்னை பார்த்து கேள்விக்குறியாய் அவனை பார்க்க தைரியமாய் திறங்க “நம்ம சார்” தான் என்று உள்ளே அழைத்து சென்றான்.
உள்ளே மிக் விசாலமாய் இருந்தது. ஒரு மருத்துவமனை எப்படி இருக்கும் அப்படி தனித் தனியாய் அறைகள் இருந்தன. ஒரு அறைக்குள் அழைத்து சென்றவன் அங்கு படுத்து இருந்தவரை பார்த்த எனக்கு அவ்வளவு பரிதபமாக இருந்தது. சார் இங்கிருக்கறவங்க எல்லாம் சொந்தக் காரங்களால கை விட்டவங்க, மொத்தம் பத்து பேரை வச்சு மேடம் பாத்துக்கறாங்க. இங்க வேலையாளுங்க, வேலை செய்யறவங்க, அது போக ஒரு டாக்டர் தினமும் இவங்களை பரிசோதிச்சுட்டு போவாரு. நர்ஸுங்க இரண்டு பேரு இருக்காங்க. இவங்களுக்கு எல்லாம் சம்பளம் மத்த செலவுகள் எல்லாத்தையும் மேடம்தான் பார்த்துக்கறாங்க.
இதைய வெளிய சொல்லி விளம்பரம் செய்யறதை மேடம் விரும்பறதில்லை. ஆனா இதுக்காக ஆகற செலவுகளை சட்ட பூர்வமான பணத்துல மட்டும் செய்ய முடியாது. அப்படி கையில் ஒரு லட்ச ரூபாயை இவங்க செலவுக்கு கொண்டு போய் கொடுக்க போனபோதுதான் மாட்டிகிட்டேன். நான் சொல்லியிருந்தா அன்னைக்கு மேடத்தோட பேரு பெரிசா பிரபல மாயிருக்கும். ஆனா மேடம் சொல்ல வேண்டாம் அப்படீன்னுட்டாங்க.அதனால் தப்பை ஏத்துகிட்டேன்.
எனக்கு பிரமிப்பாய் இருந்தது. யாரை பாராட்டுவது இவனின் மேடத்தையா? அல்லது பேர் வரக்கூடாது என்று திருட்டுப் பட்டம் ஏற்றுக்கொண்ட இவனையா ? இதில் எனது தொழிலால் இவனைப்பற்றிய “நடிகை வீட்டு டிரைவரின் கைவரிசை” என்ற செய்தியானது என் மனசை கனக்க செய்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (13-Jan-21, 11:23 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 147

மேலே