அனைத்து கோளின் தாய்த்தமிழ்

மண்ணெங்கும் செந்தமிழால் பேசிய பொற்காலம்
மறுபடியும் செழிந்தெழுந்து நீளாயுள் அடையாதோ
எழுத்து சொல் பொருள் யாப்பு அணியென தோன்றிய
செம்மை இலக்கணம் புவியை தழுவி உயர்த்தாதோ
கதிர் தோன்றிய காலத்தில் தோன்றிய கருத்தமிழ்
காலம் மாறுந்தோறும் புது பிறவியெடுத்து தழைத்து
கல்லில் மண்ணில் ஓலையில் வாழ்ந்தே நிலைத்து
கண்டு படித்தோர் அறிவை விண் அளவில் உயர்த்தி
மிகை அறிவால் உயரச்செய்த பைந்தமிழ் மீள பரவாதோ
இலக்கில்லாமல் வளர்ந்து இலக்கியம் பல கண்டு
இயங்கும் இவ்வுலகத்தை இயக்கும் ஆதி தமிழின்
ஆற்றலால் உலக உயிர்கள் உரம் பெற்றுத் துள்ளாதோ
அணுக்கள் பிணைந்தால் பேராற்றல் வருவதைப்போல்
எழுத்துக்கள் தனித்தும் இணைந்தும் ஆற்றல் தமிழாய்
ஆராவரித்து அகில பொருட்களுக்கு அர்த்தம் தந்து
அனைத்தையும் அணைத்தே சென்று பாதுகாக்கும்
அனைத்து கோளுக்கும் அன்னையான தாய்த்தமிழ்
அரசாளும் திருநாளே அமிழ்தமாகும் உலக உயிர்க்கு.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Mar-21, 9:08 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 132

மேலே