தென்றல்போல் நீ வருவாய்
புன்னகை முல்லைப்பூ
மென்னிதழ் ரோஜாப்பூ
கன்னம் செம்மாங்கனி
தென்றல் உன்வருகை !
----துறையில் தென்றலாய் வருகை தந்த வஞ்சியை
விருத்தத்தால் விருந்தோம்புவோம்
புன்னகை முல்லைப்பூ சிரிக்கும்
மென்னிதழ் ரோஜாப்பூ விரியும்
கன்னம் செம்மாங்கனி சிவக்கும்
தென்றல் உன்வருகை இனிக்கும் !
----துறையில் புன்னகையில் வருகை தந்த வஞ்சியை
விருத்தத்தில் விருந்தோம்பினோம் .
குறள் வடிவில் வஞ்சி குறுநகை புரிவதை காண்போம் .
புன்னகை முல்லை இதழ்களோ ரோஜாப்பூ
கன்னமோ மாதென்றல் நீ !
----வஞ்சி குறள் வடிவில் சிரிக்கக் கண்டோம் ; அவளை அளவடியில்
வெண்பாவையாய் நடந்து வரச்செய்வோம்
புன்னகையில் முல்லைச் சிரிப்பை உதிர்த்திடுவாய்
மென்னிதழில் ரோஜா மலரை விரித்திடுவாய்
கன்னத்தில் மாங்கனி யைஏந்தி நிற்பவளே
தென்றல்போல் நீவரு வாய்
----வஞ்சி வெண்பாவில் அளவடியால் நடந்துவரக் கண்டீர்கள் அன்றோ !