பண்பாளர் பேராசிரியர் இ கி இராமசாமி அய்யா வாழ்க கவிஞர் இரா இரவி

பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க!
கவிஞர் இரா. இரவி !

பகுத்தறிவுப் பாதையிலே வெற்றிநடையிடுபவர்
பாவேந்தர் பற்றி நூல்கள் பல எழுதியவர்!

யாதவர் கல்லூரியில் முதல்வராக இருந்தவர்
யாவரின் மனதிலும் நல்லிடம் பெற்றவர்!

புன்னகையை முகத்தில் அணிந்தே இருப்பவர்
புண்படும்படி யாரையுமே என்றும் பேசாதவர்!

ஆய்வரங்கம் கருத்தரங்கம் நிகழ்த்தியவர்
ஆய்வுநோக்கில் நூல்கள் பல வடித்தவர்!

மாணவர்கள் மனதில் நிற்கும்படி வாழ்பவர்
மாணவர்கள் விழா எடுத்து மகிழ்ந்தனர்!

பவளவிழா மலரும் வெளியிட்டு மகிழ்ந்தனர்
பண்பாளரை பாராட்டி சீராட்டி மகிழ்ந்தனர்!

பிறமொழிச் சொற்கள் கலப்பின்றி எப்போதும்
பைந்தமிழில் பேசி மகிழ்ந்திடும் நல்லவர்!

முன்மாதிரியாக திகழ்ந்திட்ட பேராசிரியர்
முனைவர்கள் பலருக்கு நெறியாளர் இவர் !

சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என
சுயமரியாதையோடு வாழும் வல்லவர்!

கோவையிலிருந்து மதுரை வந்த காரணத்தால்
கோவைத்தமிழை மறக்காமல் பேசுபவர்!

யாரையும் மதிக்கும் நல்ல பண்பாளர்
யாவரும் மதிக்கும் நல்ல பண்பாளர்!

கொண்ட கொள்கையில் குன்றென நிற்பவர்
கோபம் கொண்டு யாரும் பார்த்திருக்க முடியாது!

வெப்பம் தோப்பு திருக்குறள் கருத்தரங்கு நூல்களாக்கிட
வருடாவருடம் அகமுடை நம்பிக்கு துணை நின்றவர் !

வள்ளுவருக்கு ஒரு வாசுகி என்பது கற்பனை
வல்லவர் இராமசாமிக்கு ஒரு கசுதூரி உண்மை !

காந்தியடிகளுக்கு ஒரு கசுதூரி பாய் போல
கண்ணென இராமசாமி அய்யாவைக் காப்பவர் !

தமிழுக்குப் புகழ் சேர்த்து வரும் பேராசிரியர்
தமிழ் போல நிலைத்து என்றும் வாழ்கவே!

பொறியாளர் விசுவேசரய்யா போலவே
பேராசிரியர் நூற்றாண்டு கடந்து வாழ்கவே!
--

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (2-May-21, 12:55 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 70

மேலே