பெரியதில் பெரியனே

ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா

நல்லதும் நல்லதெல் லாமும் கொடுத்தாய்
வெல்லவும் கொள்ளவும் பலவும் கொடுத்தாய்
அறிவுடன் ஆற்றலும் நிதானமும் கொடுத்தாய்
திறமுடன் உணரவே பெரியறி வையுமே
தெளிவுடன் அறியவே எவற்றையும் தந்தாய்
காண்பதில் உண்மையை கண்டுணர்ந் தெதனையும்
சிறியதில் பெரியதாய் அறிந்தே கொள்ளவும்
அமைதியை எளிதில் மனதில் புகுத்தவும்
பெரியதில் பெரியனே இறைவா
உன்னின் தாளினை பற்றினேன் பணிந்தே. --- 1

விண்ணவா வினைத்தீர்க் கின்ற வேந்தனே
மண்ணின் உயிர்கள் படைத்த விதையனே
பெண்ணின் உடலினுள் இன்பத் துடனே
தண்ணீர் நிறைந்த உயிரைச் செலுத்தி
எண்ணிக் கையிலா அணுக்களை சிதைத்து
கண்ணின் மணியென குழந்தையை வளர்க்கும்
தொண்ணுறு வகையின் உயிர்களும் உம்மையே
அணுகிடும் அன்பனே தனியனே மூலமே
வண்மையின் குன்றனே இறைவா
பண்ணில் பாடியே பற்றினேன் பணிந்தே --- 2

நெகிழ்ந்திடும் மலையும் உந்தன் அருளினால்
காற்றும் கல்லென மாறுமே அருளால்
ஏழொலி ஓசையும் பாடிடும் உன்புகழ்
ஏழொளி வண்ணமும் உமது உருவமாய்
ஏழுகோள் வரிசையும் உம்மையே காட்டியே
மழைப்போல் பொழிந்திடும் கருணையின் ஊற்றே
தழைத்து செழித்திட தேடுதல் அறிவையும்
உழைத்து உயர்ந்திட தளர்விலா உழைப்பையும்
கொடுத்தெனை உயர்த்திடு இறைவா
என்னுள் புகுந்திட தொழுதேன் உன்னை. --- 3

மணலென மண்ணில் பிறவிகள் பலவாம்
மனமெனும் இறைவனை கொண்டவை சிலவாம்
இறைவனின் இருப்பை அறிந்ததில் சிலதும்
அவனின் அருளினை அறித்தவை சிலதும்
நிலத்திலே தொழிலால் உணவையும் எடுத்தே
நியாய விலையில் எல்லோ ருக்குமாய்
கொடுத்தே மகிழ்ந்து மீண்டும் உழைக்கும்
விவசா யியுமே மாறினான் இறைவனாய்
அந்நிலை நிலைத்திட இறைவா
வரமுமே தரவே தொழுதேன் உன்னை.. --- 4

வீரியம் மிகுந்த இயற்கையில் நிலையாய்
விரவியும் பரவியும் இருப்பதும் நீயே
உரமாய் உள்ளே இருந்தே அருளும்
இறைவா இயற்கையில் நிறைந்தே கலந்தும்
சிறப்பாய் துடிப்பாய் உயிர்ப்பாய் உயர்ந்து
செழித்து உயிர்களை வளர்க்கும் விதையே
புதியதாய் கலைகளை புதிய முறையில்
புகுத்தியே காக்கும் உன்னையே வணங்கி
அந்நிலை நிலைத்திட இறைவா
வரமுமே தரவே தொழுதேன் உன்னை.. ---5
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (29-May-21, 5:40 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 44

மேலே