கலைஞர்
முத்தமிழ் அறிஞர் கலைஞர்
😎😎😎😎😎😎😎😎😎😎😎
திருக்குவளை மண்மீது , நீ கருத்தரித்த நாள்முதலாய்
தமிழ்த்தாயும் சுயநலமாய், உனை தத்தெடுக்க மனம் துணிந்தாள்..!
அஞ்சுகம் பெற்றெடுத்து , ஐயுகம் அரசாண்ட
நெஞ்சுரப் படைப்புக்கு, நிகரிங்கு எவருனக்கு..!
கல்விதனில் குறைந்தாலும் , கலைஞரெனப் பெயரெடுத்தாய்
இலக்கியங்கள் இதழ் விரித்து , விளக்கியங்கள் பெற்றதுவே..!
சிரசொலியின் எண்ணங்களை , முரசொலியில் பதிப்பித்தாய்
முட்டாள்தன நடைமுறைகள், அட்டாலியில் பதுங்கியதே..!
அறியாமைக் கிருமி வந்து, அண்டாமல் விளக்கிவிட
நாசினியாய் மஞ்சள்த்துண்டை, நாள்தோறும் தரித்தவன் நீ..!
திரைச்சீலைப் பின்னெழும்பும் , உன் ஒலிப்பேழை வசனங்கள்
செவிப்பேழை நுழைகையிலே , சிலிர்க்குதய்யா இரத்தநாளம்..!
இந்தி இங்கு பாய்விரிக்க, மந்தியல்ல நாங்களென்று
தமிழ்த்தாய்க்கு மாநாட்டில் , தாலாட்ட தொட்டில் வைத்தாய்..!
பொதுமறைப் புலவனுக்கு, புகழ்மங்கல் நேராமல்
கோட்டம்கட்டி குடிவைத்து , வாட்டம்தீர்த்த பாட்டனய்யா..!
படைப்புக்கள் ஒன்றுசேர்ந்து , படைப்பாளியை வெளிச்சம் காட்ட
நெஞ்சுக்குள் நீதி என்று , நின்னை நீயே செதுக்கிக்கொண்டாய்..!
கல்லக்குடி பெயர்மீட்க, களம்கண்ட உன்பயணம்
பள்ளம்தோண்டி வைத்தாலும் , புயல் வெள்ளமானது இன்றைக்கும்..!
ஈன்றதென்ன பெரிதுவக்கம் , சான்றோன் இன்று தளபதியும்
மூன்றே எழுத்தில் பாராட்டி , ஒரு சான்று தருவதில் ஏன்தயக்கம்..!
வெட்டுப்பட்ட மரமென்று, வீணாய் கடலில் எறிந்தாலும்
கட்டுமரமாய் கரைதனிலே , காத்திருக்கின்றாயே மெரினாவில்..!
க.செல்வராசு.
😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎