கணினிக்கு முன்னால்
கணினிக்கு முன்னால்
நண்பகல் 12:51 மணி அடித்தவுடன் , அடுத்த வினாடியே சக ஆசிரியரின் உதவியுடன் மோட்டார் வாகனத்தில் ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தின் அறைக்குள் நுழைந்து கணினியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த பெண்மணிக்கு முன்னால் வந்து நின்ற போது சரியாக மதியம் 12 55
நவீன மயமான உலக சூழலில் அதற்கேற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இல்லாதவர் அந்த பெண்மணி. குளிரூட்டிய அறையில் கணினிக்கு முன்னால் மூக்கு கண்ணாடியோடு வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்மணிக்கு முன்னால் போய் நின்றேன்.
அவருக்கு முன்னாள் நின்றதை பார்த்த பிறகும், எனக்கு என்னவேண்டும் என்று என்னிடம் எதுவும் கேட்கவில்லை
கணினியில் எதையோ உற்று பார்த்துக்கொண்டு கொண்டு ,தான் சுறுசுறுப்பாய் இருப்பது போல் தன்னை பாவனை செய்து கொண்டார்.
’மேடம்’ என்றேன்.
மௌனமாக நான்.. கணினியில் அவரது பார்வை.
என் கையில் இருந்த வெள்ளைத் தாளை நீட்டி’ இந்த பாலிசியின் ஸ்டேட்மெண்ட் வேண்டும்’ என்றேன்.
தலையை கொஞ்சம் நிமிர்த்தி இடது கையினால் நான் கொடுத்த ரசிதீனை பெற்று ஒரு ஓரமாக வைத்துவிட்டு, மீண்டும் அவரது தேடலில் தன் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். தற்போது மணி 12 57
ஒரு மணிக்கெல்லாம் மதிய உணவுக்கு செல்ல இன்னும் மூன்று நிமிடம் தான் மிச்சம். நான் வந்த நேரத்தில் என்ன என்று கேட்டிருந்தால் ஒரு நிமிடத்தில் எனது வேலை முடிந்து இருக்கும். அவரின் சுறுசுறுப்பற்ற தன்மையைப் பொறுத்து கொள்ளாமல் மீண்டும் மேடம் ஸ்டேட்மெண்ட் வேணும் என்றேன்.
அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. ’இப்ப என்ன டைம்’? ஒரு மணி .சாப்பாட்டு நேரம். இப்ப முடியாது. இரண்டரை மணிக்கு வாங்க’ .என்று அவர் கணினியிடம் காட்ட முடியாத கோபத்தை என் மீது காட்டினார்
கொஞ்சமும் நிதானம் இழக்காமல், அமைதியாக அவரிடம் ”நான் 12 அம்பத்தி மூணு எல்லாம் இங்கே வந்துட்டேன். ஆனா நீங்க தான் என்னுடைய நேரத்தை வீணாக்கிட்டிங்க. அது உங்க தப்பு. .”என்று நான் எதிர்த்துப் பேசிய உடன் பட படவென அந்த பெண்மணி பேச ஆரம்பித்துவிட்டார்.
பக்கத்தில் இருந்தவர் சூழலைப் புரிந்துகொண்டு’ இங்க வாப்பா’ என்று அழைத்து என்ன என்றார். விளக்கி சொன்னேன். அடுத்த வினாடியே என் பாலிசி நம்பரை கம்ப்யூட்டரில் தட்டி ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து, அதில் கையெழுத்திட்டு என்னிடம் நீட்டினார்
அதை பெற்றுக்கொண்டு நான் அப்போது அங்கு தொங்கவிடப்பட்ட கடிகாரத்தைப் பார்த்தேன் மணி ஒன்று
அந்த பெண் மணி இன்னும் அந்த கணினியில் எதையோ தேடிக்கொண்டு இருந்தார்
என்ன தேடுகிறார் என்பது அவருக்கு சரியாக தெரியுமா என்பது எனக்குத் தெரியாது