பணம் இருந்தும் கொடுக்கும் மனம் வேண்டுமே
பணம் சம்பாதிப்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை; பணம் செலவழிப்பதும் இயல்பான காரியம் இல்லை; இன்று பணம் வரும் நாளை போகும் என்பது வெறும் பேச்சுக்கு மட்டும்தான்; வீட்டுக்குள் வரும் லஷ்மி வெளியே போகக் கூடாது என்பது தான் சராசரி மனிதனின் ஆசை; பணம் அனைவருக்கும் அன்றாடம் கண்டிப்பாகத் தேவை தான்; ஆனால் எல்லா பணமும் எப்போதும் தேவை இல்லை; பொருள் சேர்க்க மனமும் வழியும் அவசியம்; பணம் குவிக்க பெரிய ஆசை (பேராசை) இருந்தால் போதும்; பணத்தை அதிகரிக்க சுயபுத்தியும் தேவை, நிச்சயமாக உழைப்பும் தேவை; இந்த கூற்றை எவரும் மறுக்க முடியாது;
ஒருவர், கடும் துன்பத்தில் இருக்கும் இன்னொருவருக்கு, அவரால் முடிந்த உதவியை, உரிய நேரத்தில் செய்யவில்லை என்றால், பணம் நிறைந்த அவரை முழு மனிதராக நீங்கள் ஏற்பீர்களா? எனக்குத் தெரியாது, ஆனால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்! கொடுக்கும் குணம் இல்லாத இடத்தில் பணம் என்பது பிணம் போலத் தான், ஒரு தம்பிடிக்குக் கூட பயன் இல்லை;
அன்பு! அன்புதான் கடவுள்; அன்பினில் விளைந்து, தோன்றி, பரிமளிப்பது தான்
கருணை; கருணையின் வெளிப்பாடே இரக்கம் ; இரக்கம் கொண்ட மனதில்தான் கொடுக்கும் எண்ணம் சுரக்கும்; கொடுக்க எதுவும் இல்லை என்ற போதும், கரங்களால் உதவிட நினைக்கும்; இல்லாதவர்களுக்காக அவர் பசி, துயர் போக்க மனமாற வேண்டி வழிபடும்! இவை அன்பின் தாக்கங்கள்!
அன்பு மனம் இல்லாமல், அன்பை காட்டாமல், அன்பின் மழையில் நனையாமல், அன்பு ஓடையில் மூழ்காமல், அன்பாக இருக்க முடியாது, அன்பின் அன்பான மகத்துவத்தை அன்புடன் உணரவே முடியாது; அன்பே, நாம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு உண்மையான சான்று; ஒருவர் செல்வத்திற்கு அதிபதியாக இருந்தாலும் , இக்கட்டான தருணங்களில் வாடுபவருக்கு கொடுத்து உதவாமல் இருந்தால் அது மிகவும் குறுகிய எண்ணமே! அதிகப் பணம் இருந்து, கொடுக்க மனம் இல்லாதவர்கள், ஏழைகள் தான்! பரந்த மனதுடன் கைநிறைய எடுத்து, கொடுத்து, ஏழை எளியோரின் முகத்தில் சிரிப்பை வார்த்தால், ஆஹா, அதுவே ஒருவருக்கு உண்மையில் பெருமை! அதுவே தெய்வீக அன்பின் மகிமை!
ஆனந்த ராம்