ஏற்றம் தருவது தமிழ்

அன்பு என்றால் அம்மாதான்; அன்பான
அருமை மொழி என்றால், நம் தமிழ் தான் !

ஆண்டவர் இருக்கிறார் நம்முள்ளே; எப்படி
தமிழ் மொழி நம் உள்ளே புதைந்துள்ளதோ, அது போல!

இன்று வரை தமிழ் அமிழ்து உண்டு மகிழ்ந்தோம்; இனி
தமிழ் கடலில் மூழ்கி முத்துக்கள் எடுப்போம் !

ஈகையை மறப்பது நற்குணம் அன்று; இல்லை
என கை விரிப்பது தமிழ் பண்பாடும் அன்று!

உறவின் இரு மாபெரும் தூண்கள் தாய், தந்தை !
தமிழின் தூண்களோ , இயல், இசை நாடகம்!

ஊக்கம் தர, தாய், தந்தை ,ஆசான், தோழமை
தமிழுக்கு ஆக்கம் அளிக்க நானும் நீங்களும்!

எதிர் நீச்சல் தான் நம் வாழ்க்கை பயணம்
துணிச்சல் தமிழுக்கு என்றும் சரணம் !

ஏழையையும் வாழ வைப்பது , மனித நேயம் ,
ஏற்றம் தருவது தமிழ் எனும் இனிய காவியம்!

ஐயா என்று அழைக்கும் அழகு தமிழ் சொல்
ஐயமே இல்லை என முழங்கும் நமது செயல் !

ஒவ்வொரு தினமும் நமக்கு புதிய ஆனந்தம்
இதை தரத்தான் இருக்கிறது தமிழ் வசந்தம் !

ஓரடி தாய் பாய்ந்தால்,புலிக் குட்டி ஈரடி பாயும்
தமிழ் மொழிந்தால் காதுகளில் தேன் பாயும்!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (18-Jun-21, 4:10 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 1488

மேலே