10 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 10
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

மனிதனுடைய மனதில் தோன்றும் குறுகிய எண்ணங்களை ஒழிப்பதற்கு ஆன்மிகம் பல எளிய வழிமுறைகளைக் காட்டுகிறது. மண் மீது கொண்ட ஆசையே பாரதப்போர் நிகழ்ந்தது. பெண் மீது கொண்ட ஆசையினால் இராவணன் ராமபாணம் பட்டு அழிந்தான். மண் ஆசை பெண் ஆசையின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளை மகாபாரதம் இராமாயணம் என்ற இந்த இரு இதிகாசங்களும் நன்கு எடுத்துக் கூறியுள்ளன. நமது மனம் தூய்மையடையாமல் மனிதனுக்கு வாழ்வில் அமைதி கிடைக்காது. காமம் கோபம் பேராசை போன்றவற்றை ஆன்மீகவழியில் சென்று வென்றால்தான் வாழ்வின் அமைதி என்பது கிடைக்கும், இறைவன் அருள் கிடைக்கும் என்று ஸ்ரீஇராமகிருஷ்ணர் பக்தர்களுக்கு வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நல்ல எண்ணங்கள், தைரியமூட்டும் நல்ல சிந்தனைகள், உற்சாகமூட்டக்கூடிய மனநிலையை நாம் பழகி வரும்போது, நாளடைவில் நம் மனதில் இருக்கும் வேண்டாத குப்பை விஷயங்கள் , மனச்சோர்வுகள், பலவீனங்கள் நம்மை விட்டு வெளியேறி விடும். அதனால் தூய மனதினை பெற்று, நமக்குச் சாதகமான சூழ்நிலை உருவாகும். மனிதர்கள் உலகில் காணப்படும் இன்பங்களில் ஆசை கொள்ளாமல், மனம், வாக்கு, செயல் மூன்றிலும் ஆன்மீக வழியில் தூய்மையினைக் கடைப்பிடித்து வரவேண்டும். அதனால் நமது மனதை தூய எண்ணங்களில் நிலைநிறுத்தி, ஆன்மீகவழியில் செலுத்தினாலே மனிதன் விரும்பும் தேடும் அமைதி கிடைக்கும்.

அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பொருள்களும் மனிதனுடைய இலட்சியமாக இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த நான்கு பொருள்களிலிருந்தும் நாம் எந்த ஒன்றை மட்டும் எதிர்பார்க்கிறோம் அல்லது விரும்புகிறோம் என்று நம்முடைய மனதினைக் கேட்டால், சிந்தித்து பார்த்தால் இன்பத்தைத்தான் (ஆனந்தம் மகிழ்ச்சி சுகம்) நாம் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அறிந்து கொள்ளலாம். நாம் அறத்தின் வழியே சென்று தானதர்மங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம் அல்லது விரும்புகிறோம்.

அதன்மூலம் நமக்கு ஒருவிதமான ஆனந்தமயமான மகிழ்ச்சி கிடைக்கிறது. மனிதன் கோவில்குளங்களுக்கு செல்கிறான். கோவில்வாசலில் சந்நியாசிகளும் பிச்சைக்காரர்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தன்னால் இயன்ற அளவில் பணமோ, பசியாறுவதற்கு உண்ண உணவுப் பொருள்களோ தானமாக கொடுக்கிறான். இதற்கெல்லாம் காரணம் அவர்களின் மீது உள்ள அன்பினாலோ பாசத்தினாலோ இரக்கத்தினால் அல்ல. பிறகு எதற்காக மனிதர்கள் தானதர்மங்கள் செய்வதற்கு விரும்புகிறான்.

ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மீது இரக்கப்பட்டு முழுமனதோடு பெரும்பாலான மனிதர்கள் சுயநலமின்றி உதவி செய்வதில்லை. அவர்களுக்கு தாங்கள் உதவி செய்வதன் மூலம் அல்லது பசியை அகற்றுவதன் மூலம் தங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் செய்கிறான். தானதர்மங்கள் செய்வதன்மூலம் இன்பமாக தானும் தன்னோட குடும்பமும் சுகமாக வாழலாம் என்று நினைக்கிறான். இதுதான் எதார்த்தமான உண்மை நிலையாகும். இதனை மனசாட்சியுள்ள மனிதன் யாரும் மறுக்க மாட்டான். இதனை ஒரு சுயநலம் என்றுகூட கூறலாம். அப்படி அவன் தானதர்மங்கள் செய்தும் கஷ்டப்படுகிறான் என்று வைத்துக் கொள்ளவோம்.

மனிதர்களில் சிலர் ‘நான் கோவில் குளங்களுக்கெல்லாம் சென்று இவ்வளவு தானதர்மங்கள் செய்தும் நான் கஷ்டப்படுகிறேனே’ என்று அல்லும்பகலும் கவலைப்படுவதற்கு ஆரம்பித்து விடுவான் அல்லது மற்றவர்களிடம் புலம்புவதற்கு ஆரம்பித்து விடுவார்கள். அதனால் அவன் மனஅமைதியை இழப்பதோடு, அவன் செய்த தானதர்மங்களின் மூலம் வரக்கூடிய இன்பத்தையும் மகிழ்ச்சியையும் அவனையும் அறியாமல் இழந்து விடுகிறான். எனவே மனிதர்கள் ஏழை எளியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மீது இரக்கப்பட்டு எவ்வித பிரதிபலன்கள் கருதாது அவன் தானதர்மங்களை செய்து வரவேண்டும். அவ்வாறு தானதர்மங்கள் செய்தும் அவனுக்கு ஏதாவது கஷ்டங்கள் வந்தால்கூட தான் செய்துவிட்ட முன்வினை கர்மபலன்கள்தான் காரணம் என்று மனதினை தனக்குத்தானே தேற்றிக்கொண்டு மனபக்குவம் அடைந்து மனஅமைதி கொள்வான். மேலும் அவன் தனக்கு வரும் கஷ்டங்களையெல்லாம் மனதில் எளிதாக எடுத்துக்கொண்டு எண்ணிக்கொண்டு அவன் மனஅமைதி கொள்வான்.

மனிதர்கள் இப்படித் தானதர்மங்கள் செய்தும் அவனது ஊழ்வினைப்பயன் காரணமாகத் அவன் தாங்கமுடியாத துன்பங்களை அடைய நேரிட்டால், அவன் ‘நான் கோவிலுக்குப் போய் எவ்வளவு தானதர்மங்கள் செய்திருக்கிறேன். எனக்கு ஏன் இத்தகைய துன்பங்கள் வந்து விட்டதே’ என்று மற்றவர்களிடம் தன்மனதில் உள்ளதை அவனையறியாமல் கூறிப் புலம்புவான். இதிலிருந்து அவன் தான தர்மங்கள் செய்வது தனக்கும் தன்னோட குடும்பமும் சுகமாக இருக்க வேண்டும் என்ற சுயநல எண்ணம்தான் என்று புரிகிறதல்லவா? சுயநலமின்றி பிரதிபலனை எதிர்பாராமல் தானதர்மங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வாழ்வில் அவன் விரும்பும் தேடும் அமைதி கிடைக்கும். அதன் மூலம் அவனையும் அறியாமல் ஒருவிதமான இன்ப அனுபவத்தையும் பெறலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

சாலைகளில் பொதுஇடங்களில் உள்ள பழமரங்கள் நமக்கு சுவைமிக்க கனிகளைக் கொடுக்கிறது. மேலும் அவைகள் வெயில்காலத்தில் நிழல் தந்து நமக்கு உதவுகிறது. சூரியன் சந்திரன் விண்மீன்கள் எல்லாம் நமக்கு ஒளியை கொடுக்கிறது. வான்மேகங்கள் மழை பொழிந்து நமக்கு குடிநீரைத் தருகிறது. சுகமான காற்று வீசி நமக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கும் உலகில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் இவ்வாறு காற்று, மழை, சூரியன், சந்திரன் போன்ற இயற்கையெல்லாம் எந்தவிதமான பிரதிபலன்களுமின்றி உதவி செய்து கொண்டிருப்பதை நாம் கண்களால் பார்த்தும் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். இயற்கையைப்போன்றுதான் நாம் தானதர்மங்களை செய்யும்போது எவ்வித பிரதிபலன்களையும் எதிர்பார்க்காமல் செய்து வரவேண்டும் என்று ஆன்மிகம் கூறுகிறது. அவ்வாறு பிரதிபலன்களை எதிர்பாராமல் செய்யக்கூடிய தானதர்மங்களில் நம்மையும் அறியாமல் ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. மேலும் அதுபற்றி எந்தவிதமான கவலையும் மனம் எண்ணுவதில்லை. இதனை ‘கடமையைச் செய் பலனைப்பற்றி எதிர்பாராதே’ என்று கிருஷ்ணபரமாத்மா பகவத்கீதையின் மூலம் நமக்கு வலியுறுத்தி கூறியுள்ளார்.

உலகில் உள்ள அனைத்துப் பொருள்கள் மூலம் நாம் நாடுவது சுகம் மகிழ்ச்சி ஆனந்தம். நாம் உலகில் விரும்பி நாடும் பொருள்களை அதன் தன்மைகளை வைத்துப் பிரித்துப் பார்க்கும்போது, நமது வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள், நமது வாழ்க்கைக்கு பாதுகாப்புக்குத் தேவையான பொருள்கள், போகப்பொருள்கள் என்று வகைப்படுத்தலாம். இவற்றையெல்லாம் நாம் ஏன் நாடுகின்றோம் என்றால், அவைகள் மூலம் நமக்கு இனம்புரியாத ஆனந்தம் கிடைக்கிறது. உண்ண உணவு, உடுத்த ஆடை, குடியிருக்க இருப்பிடம் இவையெல்லாம் நமது வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் ஆகும். இந்தப் பொருள்களை அடைவதன் மூலம் நாம் ஓரளவு மகிழ்ச்சி அடைகிறோம்.

பாதுகாப்பான வீடு, பாதுகாப்பான உணவு, பாதுகாப்பான தண்ணீர், நம்மை விலங்குகள் மற்றும் விஷ ஜந்துக்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு உரிய வில் அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்கள் இவைகள்தான் நமது வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய பாதுகாப்பான பொருள்கள் என்று கூறலாம். மேலும் தற்காலத்தில் வசதி படைத்தவர்கள் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கைத்துப்பாக்கிகள், மற்றும் நவீன ஆயுதங்களும் பாதுகாப்புப்பொருள்கள் ஆகும்.

மாடமாளிகைகள், அறுசுவையுடன் கூடிய உயர்தரமான உணவுபொருட்கள், விலை உயர்ந்த பட்டாடைகள், வண்ணவண்ண ஆடம்பர உடைகள், மது வகைகள் லாகிரி வஸ்துக்கள் இவையெல்லாம் உலகில் காணப்படும் போகப்பொருள்கள் ஆகும். தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் தொலைக்காட்சிப்பெட்டிகள், மிக்சி, கிரைண்டர், வாசிங் மிஷின், மின்விசிறி மற்றும் மின்சாதனப்பொருட்கள் இவை அனைத்தும் போகப்பொருட்கள் என்றும் கூறலாம். இவற்றினை பயன்படுத்துவதன் மூலமாக நாம் சுகம் கண்டு இன்பமுடன் வாழுகிறோம். போகப்பொருள்கள் மூலம் ஒருவிதமான ஆனந்தம் கொள்கிறோம். ஆனால் இத்தகைய போகப்பொருட்களை நாம் பயன்படுத்துவதால் நம்மையும் அறியாமல் ஆரோக்கியமான வாழ்வை இழந்து கொண்டு வருகிறோம் என்பது யாருக்கும் தெரிவதில்லை. நவீன சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நமது உடல் உழைப்பு குறைந்து விடுகிறது.(அமைதி தொடரும்)
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (5-Aug-21, 11:31 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 55

சிறந்த கட்டுரைகள்

மேலே