தீக்கு உண்டு மருந்து

நல்ல வெயில், நம்ம சேதுராமன் வியர்வை விறுவிறுக்க பழைய இரும்பு சாமான்களை ஒரு லாரி ஒன்றில் ஏற்றிக்கொண்டிருந்தான். அவன் உயர்பள்ளி வரை படித்துவிட்டு பொருளாதாரம் காரணமாக சின்ன சின்ன வேலைகளை செய்து அதனால் வரும் பணத்தை வீட்டுக்கு கொடுத்து வந்தான். அவனுக்கு உடன் பிறந்தவர்கள் இரு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி. தந்தை ஒரு சின்ன கம்பெனியில் வேலை செய்து வந்து வந்தார். ஆனால் திடீரென கம்பெனியை இழுத்து மூடி விட்டனர், நஷ்டம் காரணமாக. மேலும் அவருக்கு மாரடைப்பால் கால்கள் சுவாதீனம் அடைந்து அதிகம் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். தாய் அவ்வப்போது சில வீடுகளுக்கு சென்று சமையல் செய்து கொஞ்சம் பணம் சம்பாதித்து வந்தாள். தம்பி பள்ளியில் படித்து வந்தான். தங்கைகள் இருவர் நல்ல படிப்பின் காரணமாக கல்லூரியில் மான்யம் பெற்று படித்து வந்தார்கள். சேதுராமன் அவ்வப்போது அவன் குடும்பத்தை பற்றியும் அவன் வருங்காலம் பற்றியும் நினைத்து வருந்தி, குழம்பி போய் கொண்டிருந்தான். அவனுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற நாட்டமும் இல்லை. ஆனால் பிறருக்கு உதவும் எண்ணம் அவனிடம் மிகவும் அதிகம். பணத்தையோ பாராட்டையோ எதிர்பார்க்காமல் அவன் அடுத்தவருக்கு ஏதாவது உதவி புரிந்து வந்தான்.

சரி, இப்போ மேலும் பார்க்கலாம் இரும்பு சாமான்களை வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்த சேதுராமன் கதையை. லாரி மேலே ஏற்றிய இரும்பு சாமான்களை சரிசெய்து அவன் லாரி மேலே ஏறி நின்றான். சரக்கு ஏற்றிக்கொண்டிருந்த லாரி போக்குவரத்துக்கு நெரிசல் நிறைந்த ஒரு சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அந்நேரம் ஒரு இளம்பெண் படு வேகமாக ஒரு மோப்பெட் வண்டியில் சென்று கொண்டிருந்தாள். என்ன ஆயிற்று என்று காண்போர் நினைத்து பார்ப்பதற்குள் அந்த பெண் லாரியின் பின்புறம் மோப்பெட் வண்டியை இடித்தாள். இடித்த வேகத்தின் காரணமாக அவள் தூக்கி எறியப்பட்டு லாரியின் மேல் இரும்பு சாமான்கள் மீது விழுவதற்கு இருந்தபோது சரியான நேரத்தில் சேதுராமன் அவன் இருகைகளால் அந்த பெண்ணை தாங்கினான். அப்படி இல்லை என்றால் அந்த பெண் கூர்மையான துரு படிந்த இரும்பு கம்பிகளின் மேல் விழுந்திருப்பாள், மிகவும் மோசமான காயம் அடைந்திருப்பாள். இதே ஒரு சினிமாவாக இருந்திருந்தால் அந்த பெண் சேதுராமன் கைகளின் மீது விழுந்து அவன் அவளை தாங்குவதை மெதுவான இயக்கத்தில் (slow motion) எடுத்திருப்பார்கள். நல்ல வேளை, தப்பித்தாள் அந்த இளம் பெண். எதிர்பார்க்காமல் நடந்த இந்த விபத்தால் அந்த பெண் மூர்ச்சையானாள். பக்கத்தில் இருந்தவர்கள் சேதுராமனிடம் சொன்னார்கள் " ஏதோ நீ மேலே இருந்ததால் இந்த பெண் மேலே போகாமல் தப்பித்தாள். மோப்பெட் மிகவும் பயங்கரமாக சேதம் ஆயிருச்சு. மொபெட்டுக்கு வந்தது
மோப்பெட்டோடு போய்விட்டது"

சேதுராமன் அந்த பெண்ணை பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்று காண்பித்தான். " தான் வண்டியை லாரியில் இடித்து விட்டோம் என்ற பயம் மற்றும் விபத்தின் அதிர்ச்சியின் காரணமாக அவள் மூர்ச்சை அடைந்துள்ளதாக மருத்துவர் கூறினார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அந்த பெண் கண்ணை திறந்து பார்த்தாள். அவளின் பெற்றோர்கள் அங்கிருந்தார்கள். சேதுராமன் அந்த பெண்ணை தாக்கியபோது அவள் இடுப்பினில் இருந்த சின்ன பையில் அவள் செல் போன் இருப்பதை அறிந்து அதை ஓபன் செய்து காண்டாக்ட் விவரங்களை பார்த்த போது ( அந்த பெண் செல்போனை லாக் செய்யாமல் இருந்ததால்) , அம்மா அப்பா என்று இரண்டு நம்பர்கள் இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து இந்த இரண்டு நம்பர்களுக்கும் போன் செய்து சேதுராமன் விவரத்தை சொன்னான். பெண்ணின் அப்பா உடனேயே கிளம்பி ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்து அவனுக்கு மிக்க நன்றி சொல்லியவுடன் சேதுராமன் விபத்து நடந்த இடத்தை சொன்னான். தான் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தகவல் கொடுப்பதாக பெண்ணின் தந்தை கூறினார். அவனுடைய செல்போன் நம்பரையும் வாங்கிக்கொண்டார்.

அன்று இரவு அந்த பெண் சேதுராமனுக்கு போன் செய்து நன்றி கூறினாள். வேகமாக தான் மொபெட்டில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு வண்டியின் சமநிலை இழந்து விபத்து நடந்து விட்டது என்று கூறினாள். அவள் பெயர் சுமதி என்றும் கூறினாள். அடுத்த நாள் அவள் தந்தையுடன் சேதுராமன் வீட்டிற்கு சென்று சேதுராமனுக்கு நேரில் நன்றி கூறினாள். அவன் வீட்டை பார்த்து விட்டு அவன் குடும்ப நிலை பற்றியும் அவர்கள் தெரிந்து கொண்டனர். பின்னர் மீண்டும் நன்றி தெரிவித்து விட்டு அவர்கள் வீடு திரும்பினர். ஒரு வாரம் கழித்து சுமதி சேதுராமனுக்கு போன் செய்து அவள் தந்தையின் தொழிற்சாலையில் நிர்வாக வளாகத்தில் வேலை செய்ய முடியுமா என்று கேட்டாள். சம்பளம் மாதம் 25000 என்றாள். சேதுராமன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் மனதில் நினைத்துக்கொண்டான் ' கரும்பு தின்ன கூலியா". " ரொம்ப நன்றி. குடும்ப சூழ்நிலை உள்ள நிலையில் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததிற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.உங்களுக்கு மீண்டும் நன்றி"

அடுத்த ஒரு வாரத்தில் சேதுராமனுக்கு வேலை அழைப்பு கடிதம் வந்தது. அதில் கையொப்பம் இட்டிருந்தது வேறு யாரும் இல்லை, சுமதி தான். சேதுராமன் மிகுந்த ஆச்சரியமும் குதூகலமும் அடைந்தான். அடுத்த நாளே சென்று வேலையில் சேர்ந்தான். பலவகை துணி வகைகள் அங்கே தயாரிக்க பட்டு வந்தது. அங்கே நான்கு துணி கிடங்குகள் இருந்தது. அதில் ஒன்றை சேதுராமன் பார்த்து கொள்ள வேண்டும். மூன்றே மாதத்தில் சேதுராமன் நல்ல திறமையுடனும் பொறுப்புடனும் பணிகளை செய்ய கற்றுக்கொண்டான். சுமதி வாரம் ஒரு முறை அவன் வேலை செய்யும் துணி கிடங்கிற்கு வந்து அவனை விசாரித்து அவன் வேலைகளையும் பாராட்டி சென்றாள். வேலை கிடைத்து மாதாந்திர வருமானம் கிடைத்ததால் சேதுராமன் அவன் குடும்பத்தை ஓரளவுக்கு நன்கு கவனிக்க முடிந்தது.

ஒரு நாள் சுமதி தொழிற்சாலையில் ஒரு துணி கிடங்கில் ஆலோசனை கூட்டத்திற்காக சென்றிருந்தாள். பேச்சு வார்த்தைகள் முடிந்து சுமதி தனி ஒரு அறையில் சில குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தாள். அந்த அறையில் நிறைய பட்டு துணிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. திடீரென அங்கே தீ பிடித்து கொண்டது. வேலை தீவிரத்தில் சுமதி தீ பற்றியதை முதலில் கவனிக்கவில்லை. அவளை பின்னாலிருந்து தீ பற்றிய போதுதான் அவளுக்கு அந்த அறையில் தீ பிடித்துக்கொண்டது தெரிய வந்தது. என்ன தோன்றியது என்று தெரியவில்லை அவள் செல்போனில் சேதுராமனுக்கு போன் செய்து தான் பக்கத்துக்கு துணி கிடங்கில் தீரயில் சிக்கி கொண்டிருப்பதாக சொல்லி முடிக்கவில்லை, தீ அவளை படர தொடங்கியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கார்பன்டை ஆக்ஸிடே உருளைகளை எடுத்து வந்து தீயை அணைக்க துவங்கினர் தீயணைப்பு மையத்திற்கு தகவல் சென்று தீயணைப்பு வண்டியும் தொழிற்சாலையை நோக்கி விரைந்தது. சீதாராமன் போனில் சுமதியின் குரலில் இருந்த பீதியை கவனித்து மிகவும் கவலை அடைந்தான். 100 மீட்டர் தூரத்தில் சுமதி இருக்கும் துணி கிடங்குக்கு மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றான். தீ வெளியிலும் பரவி உள்ளதால் சுமதியின் அறைக்குள் யாரும் செல்லவில்லை. வெளியிருந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். சேதுராமன் ஆபத்தின் விளைவுகளை பற்றி ஒரு கணம் கூட சிந்திக்காமல் சுமதியின் அறைக்குள் ஓடி நுழைந்தான். ஒருவர் சேதுராமன் கையில் ஒரு போர்வையை கொடுத்தார். அந்த நிலையிலும் சுமதி அங்கும் இங்கும் ஓடாமல் தரையில் மல்லாக்காக படுத்து அவள் முகம் தீயினால் சுடாதவாறு போராடிகொண்டிருந்தாள். சேதுராமன் அவளை போர்வையால் சுற்றி அப்படியே தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்தான். ஒரு சில அதிகாரிகளும் தொழிலார்களும் தொழிற்சாலையின் ஆம்புலன்ஸ் வண்டியில் அவர்கள் இருவரையும் பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கூட்டிசென்றார்கள். அதே நேரத்தில் தீயணைப்பு வண்டியும் அங்கே வந்து அடுத்த 15 நிமிடங்களில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. நல்ல வேலையாக தீ மற்ற துணி கிடங்குகளுக்கு பரவவில்லை. ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் இருவரும் முதலுதவி பெற்றார்கள். அதிருஷ்டவசமாக தீயின் பாதிப்பு மிக கடுமையாக இல்லை. சுமதிக்கு உடம்பில் அங்கும் இங்கும் பல தீ காயங்கள்.அவள் முகம் தப்பித்தது. சேதுராமனுக்கு முகத்திலும் தீ காயங்கள் ஏற்பட்டது.சுமதி மற்றும் சேதுராமனின் குடும்பத்தினர் அவர்களை சென்று பார்த்தனர். சுமதியின் தந்தை வெளியூரிலிருந்து விமானம் மூலம் அன்று இரவே வந்து விட்டார். தன் தொழிற்சாலையில் தன் மக்களுக்கே தீ விபத்தா என
அதிர்ந்து போனார். இரண்டு நாட்களில் இருவரையும் வேறு பெரிய ஆஸ்பத்திரிக்கு கூடி சென்று சிகிச்சை அளித்தார்கள். சுமதி 2 வாரங்களில் குணம் அடைந்தாள்.ஆனால் சேதுராமனுக்கு முகத்தில் தீக்காயத்தினால் இரண்டு பக்கமும் தழும்பு ஏற்பட்டது. அவனுக்கு ஸ்கின் கிராபிட்டிங் ( தோல் மாற்றம்) செய்யப்பட்டது. மூன்று மாதங்களுக்கு பிறகு அவன் மீண்டும் வீடு திரும்பினான். ஆனால் அவன் முகம் பழைய பொலிவுடன் இல்லை.இருப்பினும் வாழ்க்கையில் அவனுக்கு ஒரு புது பொலிவு உண்டானது. சுமதி சேதுராமனை திருமணம் செய்து கொண்டாள்.

சுமதியின் தந்தை அவர்கள் இருவருக்கும் தனது வேறு ஒரு வியாபாரத்தை கொடுத்து வீட்டிலிருந்தபடியே கவனிக்க ஏற்பாடு செய்தார். சுமதியின் திறமையாலும், சேதுவின் உழைப்பினாலும் அந்த வியாபாரம் நன்கு விரிவடைந்து நல்ல லாபத்துடன் இயங்க தொடங்கியது. சேதுவின் தம்பி பி.காம் பட்டம் பெற்று அவர்கள் வியாபாரத்தில் உதவியாக இருந்தான். சேதுராமன் தன் பெற்றோர்களையும் தன்னுடனே வைத்து கொண்டான்.அவன் தங்கை இருவரும் அமெரிக்கா சென்று மேற்படிப்பு படித்து முடித்து அங்கேயே நல்ல உத்தியோகத்தில் சேர்ந்தனர். சிறந்த மருத்துவ உதவியினால் சேதுவின் தந்தைக்கும் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவன் தாயின் மகிழ்ச்சியை கேட்கவேண்டுமா?

அடுத்த மூன்று வருடங்களுக்கு பின் சுமதி சேதுராமன் இருவரும் சேர்ந்து 30 லட்சம் ரூபாயில் " தீக்கு உண்டு மருந்து" என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவினார்கள். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள்ள மக்களுக்கு தீ விபத்தினால் ஏற்படும் அனைத்து செலவுகளையும் இந்த அறகட்டளை ஏற்றுக்கொண்டு காயமடைந்தவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் முடிந்த உதவியையும் செய்து வருகிறது.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Aug-21, 5:18 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 73

மேலே