13 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 13
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

ஒரு பொருளினால் மனிதன் அடையும் இன்பத்தை மகிழ்ச்சியைப் பற்றி சிந்தித்துப் பார்த்தால், ஏதாவது ஒரு துன்பம் கலந்த நிலையில்தான் மகிழ்ச்சி ஆனந்தம் மனித வாழ்க்கையில் இருக்கிறது. ஒருவர் நல்ல வசதியான வீட்டை வங்கியின் மூலம் கடன் பெற்று வாங்குகிறார். அந்த வசதியான புதுவீட்டினை வாங்குவதன் மூலம் அவர் ஆனந்தமடைகிறார். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் வீடு வாங்குவதன் மூலம் வங்கியில் அவர் கணக்கிலிருந்து ஒரு கணிசமான தொகை மாதந்தோறும் குறைந்து விடுகிறது.

அதனால் அவர் மனம் அவரையும் அறியாமல் வங்கியில் தமது கணக்கில் பணம் குறைந்து விட்டதே என்று இயல்பாகவே வருந்துகிறது. அவர் வீடு வாங்கும்போது அவருக்கு கிடைத்த மகிழ்ச்சியானது வங்கியில் அவர் கணக்கில் இருப்புப் பணம் குறைந்தவுடன் அவருடைய மனம் அவரையும் அறியாமல் இயல்பாக வருந்துகிறது. இதன்மூலம் ஒவ்வொரு இன்பத்திலும் மகிழ்ச்சியிலும் துன்பமும் கலந்தே இருக்கிறது என்பதை இதன்மூலம் உணர்ந்து கொள்ளலாம். இதனை நாம் உணர்ந்து கொள்வதற்கு ஆன்மிகம் கதைகள் பாடல்கள் மற்றும் மனப்பயிற்சி மூலமாக வழி காட்டுகிறது. மனித வாழ்வில் ஆனந்தம் கூடாது என்று ஆன்மிகம் கூறவில்லை. அப்படி ஆனந்தம் கொள்வதில் தாமரையிலைத் தண்ணீர்போல் இருக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது.

ஒருவர் விலை உயர்ந்த சொகுசான தேக்குமரக் கட்டில் மெத்தை வாங்குகிறார். கட்டில் மெத்தை வாங்கியது அவருக்கு மிக்க மகிழ்ச்சிதான் அதில் எவ்விதச் சந்தேகம் இல்லை. அந்த மகிழ்ச்சி தான் வாங்கிய கட்டிலையும் மெத்தையையும் பாதுகாக்கவேண்டும் என்ற கவலை அவருக்கு இயல்பாக வந்து விடுகிறது. அவற்றின் விலையைபற்றி அவரையும் அறியாமல் ஏதோவொரு சூழ்நிலையில் நினைத்துவிடும்போது, அவருக்கு தூக்கம்கூட அப்போது தொலைந்து விடுகிறது. இதனை நாம் ஒரு கோணத்தில் எண்ணிப்பார்த்தால், அவர் தன்னோட தூக்கத்தை விற்று, அந்த விலை உயர்ந்த கட்டில், சொகுசான மெத்தையை வாங்கி இருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். எனவே உலகில் ஒவ்வொரு பொருள்களின் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய ஆனந்தம் மகிழ்ச்சி சுகமும், அந்த ஆனந்தத்தோடு மகிழ்ச்சியோடு நம்மையும் அறியாமல் ஒரு துன்பம் துயரமும் அதனுடன் சேர்ந்தே வருகிறது என்பதை உணரலாம்.

ஒரு விளையாட்டு வீரனுக்கு நன்கு விளையாடியதால் உலக அளவில் பேரும்புகழும் கிடைக்கிறது. அதனால் அந்த விளையாட்டு வீரருக்கு ஒருவிதமான இன்பம் மகிழ்ச்சி ஆனந்தம் கிடைக்கிறது. ஆனால் அந்த வீரன் அடைந்த பேரும்புகழுக்கும் கிடைப்பதற்கு முன்பு தன்னோட உடலையும் உள்ளத்தையும் மிகவும் வருத்தி பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதனால் உடலும் உள்ளமும் அப்போது கஷ்டத்தினால் வருந்துகிறது. இதிலிருந்து நாம் ஒன்றை உணரவேண்டும். மனிதர்களுடைய வாழ்க்கையில் துன்பமும் இன்பமும் கலந்தே காணப்படுகிறது. மனிதன் உலகில் ஒரு சுகத்தை அடையும்போது அந்த சுகத்தின் மூலம் ஏதோ ஒன்றை நம்மை அறியாமல் இழந்து விடுகிறோம். எனவே வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்தது என்று நாம் மனபக்குவம் பெற்றுவிட்டால், மனம் கலக்கம் அடைவதில்லை. இதையெல்லாம் எண்ணிப்பார்த்து நிரந்தரமான ஆனந்தம் மகிழ்ச்சி கிடைப்பதற்கு ஆன்மீக வழியில் நாம் முயற்சி செய்து செயல்படும்போது, நாம் விரும்பும் தேடும் மனஅமைதி கிடைக்கும்.

ஒருவர் பட்டிமன்றத்தில் பேசுவதில் சிறந்த பேச்சாளாராக இருக்கிறார். அதனால் அவருக்குப் பணமும் பேரும்புகழும் கிடைக்கிறது. அதனால் தனக்குக் கிடைத்த பேரும்புகழையும் பணத்தையும் நினைத்து அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் தன்னோட மகிழ்ச்சியை பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதெல்லாம் ஒருவிதமான இன்பத்தை அடைகிறார். அவர் தன்னோட குடும்பத்தாரிடம் சேர்ந்து பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சியை அவரையும் அறியாமல் அவர் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது இழந்து கொண்டிருக்கிறார். அதனால் அவருடைய மனம் அவரையும் அறியாமல் தனக்குள்ளே சிறிது வருந்துகிறது. இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால் ஒரு இன்பத்தை அடையும்போது நம்மையும் அறியாமல் ஒரு துக்கத்தை உணருகிறோம் அல்லது எதோ ஒன்றினை இழக்கிறோம்.

எனவே வாழ்க்கையில் ஒன்றை அடையும்போது ஒன்றை நம்மையும் அறியாமல் இழந்து விடுகிறோம் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். நமக்கு துன்பம் வரும்போதெல்லாம் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து மன ஆறுதல் பெற்று கவலையில்லாமல் மனஅமைதி அடையலாம் என்று ஆன்மிகம் வழி காட்டுகிறது. மேலும் அது நிரந்தரமான ஆனந்தம் மகிழ்ச்சி சுகம் எது என்று ஆன்மிகம் வழிகாட்டுகிறது. அந்த வழியினை ஆன்மிகம் மூலம் அறிந்து மனஅமைதி கிடைப்பதற்கு முயற்சி செய்து, நாம் செயல்களில் ஈடுபடும்போது, நாம் விரும்பும் தேடும் மனஅமைதி கிடைக்கும்.

பொதுவாக மனிதன் ஒரு பொருளை அடைவதன் மூலம் கிடைக்கும் ஆனந்தம் இன்பம் மகிழ்ச்சி அவனுக்கு தொடர்ந்து கிடைக்குமானால் அந்தப் பொருளுக்கும் அந்த பொருள் மூலம் வரக்கூடிய இன்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அடிமையாகி விடுகிறான். அதனால் அவன் சுதந்திரத்தினைக்கூட இழந்து விடுகிறான்.. ஒரு பொருள் மூலம் அடையும் இன்பம் மகிழ்ச்சி ஆனந்தம் ஆகியவற்றை சிறுசிறு குறைபாடுகளுடன் நாம் அனுபவிக்கும் ஆனந்தத்தில் இருப்பதையும் பார்க்கலாம்

நமக்கு கிடைக்ககூடிய ஆனந்தம் மகிழ்ச்சி எப்படி இருக்க வேண்டுமெனில், நாம் அடையும் ஆனந்தம் மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்க வேண்டும். அந்த ஆனந்தம் நமக்கு குறைவில்லாத ஆனந்தமாக இருக்க வேண்டும். அந்த ஆனந்தம் துன்பம் கலவாத ஆனந்தமாக இருக்க வேண்டும். அந்த நித்திய ஆனந்தத்தினைப் நாம் பெறுவதில் சுதந்திரமாக இருக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கும் ஆனந்தத்திற்கு மகிழ்ச்சிக்கு மனதளவில் அடிமையாகாமல் இருக்க வேண்டும். அதற்கு ஆன்மீக வழியில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நித்தியமான இன்பம் மகிழ்ச்சி ஆனந்தத்தைதான் மோட்சம் வீடு என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

ஒரு பொருளை அடையும்போது கிடைக்கும் பாதுகாப்புடன் கூடிய இன்பம், மகிழ்ச்சியானது, நிரந்தரமாக அவனுக்கு இருப்பதில்லை என்பதை நாளடைவில் உணர்ந்து கொள்கிறோம். பொதுவாக மனிதர்கள் ஆனந்தமாக இருக்கும்போது அதில் உள்ள குறைபாடுகளை பற்றி கவனிப்பதில்லை. குறைகளுடன் காணப்படும் மகிழ்ச்சியை ஆனந்தத்தைத்தான் நாம் அடைந்து கொண்டு இருக்கிறோம். ஒரு பொருளை அடைவதால் கிடைக்கும் ஆனந்தம் அதாவது உண்மையான ஆனந்தம் மனஅமைதி எங்கு கிடைக்கும்? எப்படி அதனை அடையலாம்? என்பதை ஆன்மிகம் வழி காட்டுகிறது.

நாம் நிரந்தரமான இன்பம் என நினைத்து, நிலையில்லாத இன்பத்தில் அழுந்திக் கிடக்கிறோம். இதனை ஆன்மிகம் மாயை என்று கூறுகிறது. மனிதன் ஒரு பொருளை அடையும்போது அதன் மூலம் கிடைக்கும் இன்பத்தில் இருக்கும்போது அதில் உள்ள குறைகளை அவனது மனம் எண்ணிப் பார்ப்பதில்லை. அவன் குறைகளுடன் கூடிய இன்பத்தையே அவன் நிரந்தரமானது என்று எண்ணி அதிலேயே மூழ்கி விடுகிறான். அதனால் அவன் நிரந்தரமான இன்பம் தரக்கூடிய மோட்சத்தினை அவன் அடைய முடியாமல் தவிக்கின்றான். உலகில் உள்ள இன்பங்களை அதாவது உலகில் ஒரு பொருள் மூலம் கிடைக்கக்கூடிய இன்பம் நிரந்தரமானது என்று மனம் எண்ணிக்கொண்டு ஒருவித மயக்கத்தில் அந்த இன்பத்திலே மூழ்கி விடுகிறது. நிரந்தரமான இன்பம் தரக்கூடிய மோட்சம் பற்றி மனஅமைதி கிடைப்பது பற்றி நமது மனம் எண்ணுவதில்லை.

எடுத்துக்காட்டாக ஒரு முதியோர் இல்லத்தினை நடத்துபவர் கூறியதை பற்றிக் கேளுங்கள். அதனைப்பற்றி நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நல்ல வசதியான நிலையில் இருக்கும் பெற்ற மகன்களே தங்கள் தாய் தந்தையை வயதாகி விட்டது என்ற காரணத்தினால் வெறுப்புடன் முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டு செல்கிறார்கள். அந்த முதியோர்களும் ஆரம்பத்தில் முதியோர் இல்லத்தில், தங்களுக்கு தாங்கள் விரும்பும் மனஅமைதி கிடைக்கும் என்ற எண்ணத்தில் வந்து விடுகிறார்கள். அந்த முதியோர்கள் முதியோர் இல்லத்தில் வந்த பிறகும் மன வைராக்கியத்துடன் இருப்பதில்லை. அங்கு வந்து சேர்ந்த சில மாதங்களில் அந்த முதியோர்கள் தன்னோட மகன் மருமகள் பேரன் பேத்தி இவர்களையெல்லாம் பார்க்கவேண்டும் என்றும், முதியோர் இல்லத்தை விட்டு போக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். காரணம் ... (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (30-Aug-21, 8:44 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 27

மேலே