அரசனாகான் இயல்பு - நீதிநெறி விளக்கம் 30

இன்னிசை வெண்பா

இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான்
நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன்
ஆவன கூறின் எயிறலைப்பான் ஆறலைக்கும்
வேடலன் வேந்தும் அலன் 30

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

இன்று கொள்ளத்தக்க பொருள்களை நாளைக்கு வாங்கிக் கொள்ள ஒருநாள் பொறுக்க மாட்டான்;

சற்று நேரம் எதிரே நின்று குடிகள் தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டிக் கொள்ள அகப்பட மாட்டான்;

ஒருவன் எதிரே போய்த் தனக்கு வேண்டியவற்றைக் கூறினால் பல்லைக் கடித்து அச்சுறுத்துவான்;

இப்படிப்பட்டவன் வேடனும் அல்லன் அரசனும் அல்லன். (Posted)

விளக்கம்:

இன்று கொளற்பால – இன்று கொள்ளும் பான்மையை யுடையவை.

நின்று குறையிரப்ப - பொறுமையாய்க் குறையிரத்தல்,

நாளைக் கொளப் பொறானாயினும் அங்ஙனம் ஒருநாள் பொறுக்குமாறு குடிமக்கள் தமக்குள்ள குறைகளைச் சொல்லிக் கொள்ளலாமென்றாலும் அதற்கும் நேர்படான்.

ஏதோ நல்ல காலமாக நேர்பட்டானாயினும் அவர்கள் தமக்கு ஆவன கூறும்பொழுது அதனை ஏற்றுக் கொள்ளாமல் எயிறலைப்பான்;

இரைப்பாரைப் போல நின்று தங்குறை கூறதலுணர்த்திற்று. இதனை இரண்டாகப் பிரித்து இடர்ப்படுவாருமுளர் இங்ஙனமே எயிறலைத்தல், ஆறலைத்தல் என்பன பண்டுதொட்டே பற்கடித்தல் வழிப்பறித்தல் என்னும் பொருள் மேலாகவே வருதலின், ஒரு சொன்னீர்மைய வென்று கொள்க.

நேர்படல் - ஒத்து நிற்றல், இங்குக் குறையிரத்தல் வேண்டுமென்று ஒத்து நிற்றலை உணர்த்திற்று.

காட்டில் நின்று பறியாமையாலும் வேடனல்லன் என்றும், குடிகளிடத்தில் தண்ணளியில்லாமையாலும் முறையாகப் பாதுகாவாமையாலும் வேந்தனல்லன் என்றுங் கூறினார்.

கருத்து:

அரசன் குடிகளின் நலத்திற் கருத்துடையனாதல் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Sep-21, 11:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே