கேள்வியுள் எல்லாந் தலை மூன்றாம் – திரிகடுகம் 31
இன்னிசை வெண்பா
பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாங்(கு)
இல்லறம் முட்டா(து) இயற்றலும் - வல்லிதின்
தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றுங்
கேள்வியுள் எல்லாந் தலை. 31
- திரிகடுகம்
பொருளுரை:
பல நல்லோர் கூடியுள்ள சபைகளில் நல்ல நூற்பொருள்களைக் கற்றுணர்தலும், பிரமசாரி முதலிய பதின்மர்க்குப் பகுத்துக் கொடுத்து தானும் உண்டு அந்நிலையில் இல்லாளோடு கூடிச் செய்யும் அறமானது குறைவுபடாமல் செய்தலும், ஊக்கத்தொடு முயற்சியால் செய்தற்கரிய செய்கையை செய்து முடித்தலும் இந்த மூன்றும் கல்விகளெல்லாவற்றிலும் சிறந்த கல்வியாம்.
கருத்துரை:
கற்கத் தக்கவற்றைக் கற்றலும், இல்லறத்தை முட்டின்றிச் செய்தலும், ஊக்கத்தோடு முயற்சியால் அருஞ்செயல் ஆற்றலும் தலைசிறந்தன.
வல்லிது: வலிமை, தாளின்: ஏதுப்பொருள்,