நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம் - நீதிநெறி விளக்கம் 31

நேரிசை வெண்பா

முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி
உடுப்ப வுடுத்துண்ப வுண்ணா - இடித்திடித்துக்
கட்டுரை கூறிற் செவிக்கொளா கண்விழியா
நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம் 31

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

முடிக்கத்தக்க மலர் முதலியவற்றை முடித்துக்கொண்டு,

அதன்பின்பு பூசத்தக்க கலவை முதலியவைகளைப் பூசிக்கொண்டு,

உடுக்கத்தக்க பட்டாடை முதலியவற்றை உடுத்துக் கொண்டு,

உண்ணத்தக்க நறுநெய் கலந்த உணவுகளை உண்டு உயிர்த்தன்மை காட்டி,

பலமுறை நெருக்கி நெருக்கி அறிவுரை கூறினாலும் காது கொள்ளாதனவாய்க், கண் திறந்து பாராதனவாய்ப் பிணத்தன்மை காட்டி நிற்கும் அரசர்கள் பெருமூச்சோடு கூடிய பிணங்களே ஆவார்கள்.

விளக்கம்:

முடிப்பதும் பூசுவதும் உடுப்பதும் உண்பதுமான செயல்களெல்லாம் உயிரிருப்பதுபோற் காட்டுகின்றன.ஆனால் கேளாமையும் பாராமையும் உயிரில்லாததுபோற் காட்டுகின்றன.

உயிருக்கு முதன்மையான தன்மை அறிவே ஆதலின், அதன் செய்கைகளான கேட்பதும் பார்ப்பதும் இல்லாத அரசர்களைப் `பிணம்’ என்றே கூறல் வேண்டினார்; .

ஆனால் அவ்விறந்த பிணத்தினின்றுஞ் சிறிது வேற்றுமை காட்டுதற் பொருட்டு நெட்டுயிர்ப்போடுற்ற பிணமென்றாரென்க.

முடிப்ப, பூசுவ, உடுப்ப, உண்ப, செவிகொளா, கண்விழியா வினையாலணையும் பெயர்கள்.

உண்ணா நின்று என்பது கடை குறைந்து உண்ணா என்று நின்றது;

இடித்திடித்துக் கூறல் - வெட்கம் வருமாறு நெருக்கிக் கூறல்,

”மிகுதிக்கண் மேற்சென்றிடித்தல்” என்பது திருக்குறள்; கட்டுரை - பொருள் பொதிந்தசொல்; உறுதியுடைய சொல்லுமாம் என்பது அடியார்க்கு நல்லாருரை..

கருத்து:

அறிவும் இரக்கமும் இல்லாதவர்கள் பிணங்களுக்கு ஒப்பாவார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-21, 8:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே