பழவினையும் பல்லாவுள் விடினும் குழக்கன்று தாய்நாடிக் கோடல் – நாலடியார் 101
நேரிசை வெண்பா
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு. 101
- பழவினை, நாலடியார்
பொருளுரை:
பல ஆக்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் இளைய ஆன்கன்று தன் தாய் ஆவினைத் தேடித் தெரிந்தடைதலை வல்லதாகும்; பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும் தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில் அத்தகைய தன்மையுடையதேயாகும்.
கருத்து:
பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்.
விளக்கம்: "மழவுங் குழவும் இளமைப் பொருள"1 வாதலின் குழக்கன்றென்றது, இளங்கன்றை.
‘பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்' 2 என்ற விடத்து, "எல்லாப் பெயரும்" என்றதனால் இம்முறைப் பெயரும் பெறப்பட்டது.
‘தொல்லை' யென்றார், தொடர்ந்து வருதல் தோன்ற.
கிழவன் - உரிமையுடையோன். விடாது பற்றும் என்றற்கு, இவ்வுரிமைப் பொருள் உணர்த்துஞ் சொல் வந்தது.