நேர்நின்று காக்கை வெளிதென்பார் என்சொலார் - நீதிநெறி விளக்கம் 33
இன்னிசை வெண்பா
ஏதிலார் யாதும் புகல இறைமகன்
கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு - நேர்நின்று
காக்கை வெளிதென்பார் என்சொலார்? தாய்க்கொலை
சால்புடைத் தென்பாரு முண்டு 33
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
காக்கையின் எதிரிலேயே நின்றுகொண்டு அக் காக்கை வெண்மையானது என்று உண்மைக்கு மாறாகப் பேசுபவர் வேறு எதைத்தான் சொல்லமாட்டார்கள்?
தாயைக் கொலை செய்தல் கூடப் பொருத்தமானதே என்று சொல்பவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள்;
ஆதலால், பிறர் தமக்குத் தோன்றியவாறெல்லாம் சொன்னாலும், அரசனாவான் அவர்கள் கூறுவதிற் குற்றமானவற்றையெல்லாம் நீக்கிவிட்டு நல்லனவற்றை மட்டுங் கொள்ளுதல் பேரறிவாகும்.
விளக்கம்:
குடிமக்கள் வழக்கிட்டுக் கொண்டு ஒருவர் மேலொருவர் அழுக்காறு முதலியவற்றாற் பொருந்தாதனவுங் கூறுவராதலால்; அரசனாவான் அவர் கூற்றுக்களை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் அவற்றிற் பொருந்துவனவே எடுத்துக் கொள்ளுமாறு கூறிற்று:
முதுக்குறைவு: பெரிய அறிவினை உணர்த்திற்று. "முதுக்குறைவி"* என்பதற்கு அடியார்க்கு நல்லார் `பெரிய அறிவுடையாள்' என்றது காண்க.
கருத்து:
எதனையும் ஆராய்ந்து பார்த்துப் பொருந்துவன கொள்வது அரசன் கடமை.