கண்கூடாப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட்கு உண்டோ உணர்ச்சி - நீதிநெறி விளக்கம் 34
இன்னிசை வெண்பா
கண்கூடாப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட்(கு)
உண்டோ உணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி
தான்வாய் மடுப்பினும் மாசுணம் கண்டுயில்வ
பேரா பெருமூச் செறிந்து 34
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
மிகுந்த நெருப்பு தன்னைச் சூழ்ந்து எரிந்தாலும் பெரியபாம்புகள் பெருமூச்சு விட்டுக்கொண்டு: அவ்விடத்தினின்றும் அசையாது தூங்கிக் கொண்டிருக்கும்;
அதுபோல, தமக்கு வருங் கெடுதிகளை நேராகவே பார்த்தார்களானாலும் கீழ்மையான குணம் கொண்ட மக்களுக்கு அவற்றினின்றுந் தப்பிப் பிழைக்கும் உணர்ச்சி உண்டோ? இல்லையாகும்.
விளக்கம்:
கண்கூடு: கண்ணுக்குக் கூடுவதான கண் பார்வையை யுணர்த்திற்று.
மண்டெரி பெருந்தீ என்பது நளவெண்பா. வாய்மடுத்தல் – உண்ணுதல்,
கருத்து:
எத்துணைக் கெடுதி வருவதாயினும் கீழ்மக்கள் மீண்டும் மீண்டுந் தீயசெயல்களையே செய்வர்.