கெடுவது காட்டுங் குறி - நீதிநெறி விளக்கம் 35
நேரிசை வெண்பா
நட்புப் பிரித்தல் பகைநட்டல் ஒற்றிகழ்தல்
பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் - தக்கார்
நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல்
கெடுவது காட்டுங் குறி. 35
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
நண்பர்களைப் பகையாக்கிக் கொள்ளலும், பகைவர்களை நட்பாக்கிக் கொள்ளலும்,
வேவுகாரர்களை இழித்துரைத்தலும், பக்கத்திலுள்ள எல்லாரிடத்தினும் ஐயுறவு கொள்ளலும்,
பெரியோர்களுடைய அறிவுரைகளை மீறலும், இயல்பான தன்மைக்கு மாறாதலும் ஆகிய இந்த ஆறு பொருந்தாத செயல்களும் பின்னால் வரும் கெடுதிகளைக் காட்டும் அடையாளங்களாம்.
விளக்கம்:
நட்பு, பகை: அவை தம்முடையாரை உணர்த்தின;
ஒற்று: எல்லாரிடத்தும் ஒன்றியிருப்பாரை உணர்த்திற்று.
நெடுமொழி - பெருமையுடைய மொழி; அறிவுரை, நட்புப் பிரித்தல் முதலிய ஆறையும் உடையார்க்குக் கேடு வரும்.