ஏக்கழுத்தம் மிக்குடைய நகைமுகத்த நன்கு மதிப்பு - நீதிநெறி விளக்கம் 39
நேரிசை வெண்பா
மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை
ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குடைய - மாகொல்
பகைமுகத்த வெள்வேலான் பார்வையில் தீட்டும்
நகைமுகத்த நன்கு மதிப்பு 39
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
பகைப்புலத்துள்ள தன் பகைவராகிய விலங்குகளையெல்லாம் கொல்லுந் திறனுடைய ஒளிமிக்க வேலேந்திய அரசன் (தன்) மலர்ந்த முகத்திற் காணும் பார்வையில் தோற்றுவிக்கும் நன்மதிப்புக்கள்,
வானும் குறையும்படி (அவ்வளவு பெரிய) பொருட் குவியலைக் குவித்து அவை முழுமையும் அவரவர் தகுதிக்கேற்ப அவ்வரசன் அள்ளிக் கொடுத்தலைப் பார்க்கிலும்) செம்மாப்பு பெரிதுடையவாகும்.
விளக்கம்:
"மாகஞ் சிறுக" என்றது நிதிக்குவையின் பெருக்கத்துக்கு,
அவரவர் தகுதிக்கேற்ப அளவுசெய்து நோக்குதலால் பார்வையிற் றீட்டும் என்று கூறினார்.
ஏக்கழுத்தமுடமையாவது அரசன் கண்ணோட்டம் இருப்பதால் இனி நமக்கு யாதுங் குறைவில்லை; எவர்க்கும் அச்சம் இல்லை என்று தோன்றும் உள்ளக் கிளர்ச்சியும், அக்கிளர்ச்சியால் ஏற்படும் செம்மாப்பும் மிக்கு'
அரசனிடம் குறையிரந்து நிற்கும் ஒருவனுக்கு அவ்வரசன் அளவற்ற பொருட் குவியலை அளிக்கிறான் என வைத்துக் கொள்வோம். அவ்வாறு பொருட்குவியலைப் பெற்று அகன்றபின், அரசன் அவனைப் போல் தன்னிடம் வந்து குறையிரந்த பல்லாயிரக்கணக்கான வறியரில் ஒருவனாய் எண்ணி அந்நேரமே அவனை மறந்துவிடுவான்.
ஆனால் அங்ஙனமின்றி எப்பொழுதும் அரசனது கண்ணோட்டம் அவனுக்கிருப்பின் அவன் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை.
அவனை நாடிவருவோர் பலர் இருப்பார். அதனால் அவனுக்கு எப்போதும் மனமகிழ்ச்சியும் செல்வாக்கும் இருந்துவரும்.
கருத்து:
அரசினடத்திலே அளவற்ற பெரும் பொருளைப் பரிசாகப் பெறுவதினும் வேந்தனாலே நன்கு மதிக்கப்படும் பேறு பெறுதல் ஒருவர்க்கு மிக்க மேம்பாட்டைக் கொடுக்கும்