பெண்ணின் இடைதனக்கு நுண்மை வனப்பாம் - சிறுபஞ்ச மூலம் 6
நேரிசை வெண்பா
படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பாம் - நடைதனக்குக்
கோடா மொழிவனப்புக் கோற்கதுவே சேவகர்க்கு
வாடாத வன்கண் வனப்பு. 6
– சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
நால்வகைப்படைக்கு யானைப் படையே அழகாகும்.
பெண்களின் இடைக்கு நுட்பமான மெலிந்த இடையே அழகாகும்.
ஒருவனுடைய ஒழுக்கத்திற்கு நடுநிலை தவறாத சொல்லே அழகாகும்.
செங்கோலுடைய மன்னனுக்கும் அந்தக் கோடா மொழியே அழகாகும்.
போர் வீரர்க்கு குன்றாத வீரமானது அழகாகும்.
கருத்துரை:
சேனைக்கு யானைப்படையும், பெண்கள் இடைக்குச் சிறுமையும், தனி ஒருவன் ஒழுக்கத்துக்கும், அரசன் செங்கோலுக்கும் நடுவு நிலை பிறழாத சொல்லும், படை வீரர்க்கு அஞ்சாமையும் அழகாகும்..