பெரிதகழின் பாம்புகாண் பாரும் உடைத்து - பழமொழி நானூறு 25

நேரிசை வெண்பா

உரிமைதனில் தம்மோ(டு) உழந்தமை கண்டு
பிரிவின்றிப் போற்றப் படுவார் - திரிவின்றித்
தாம்பெற் றதனால் உவவார் பெரிதகழின்
பாம்புகாண் பாரும் உடைத்து. 25

- பழமொழி நானூறு

பொருளுரை:

வேறுபாடின்றிக் காப்பாற்றப்படுபவர்கள் நட்புரிமையால் தம்மோடு வருந்தினமையைப் பார்த்து மன வேறுபாடின்றி தாம் பெற்ற பொருளால் மனமகிழ்தலிலராய்ப் பின்னும் விரும்பாதிருப்பர் புற்றினை மிகவும் கீழே தோண்டிச் சென்றால் அதனால், பாம்பைக் காண்கின்றவர்களையும் மிகுதியாக உடைத்தாயுள்ளது இவ்வுலகம்.

கருத்து:

செய்தது கொண்டு உவத்தலே நட்பிற் கழகாம்.

விளக்கம்:

அழிவின்கண் அல்லல் உழப்பதே நட்பாதலின், 'உழந்தமை கண்டு' என்றார்.

'திரிவுஇன்றி' என்றது. பின்னும் அவரான் முடியாத ஒரு காரியத்தைச் செய்து தருமாறு வேண்ட, அது செய்யாமை பற்றி மன வேறுபாடு கோடலின்றி என்பது.

பாம்பு காண்டல் உறுதியன்மைபோல, அவராற்றுன்புறுதல் இல்லையாம்.

ஒரு வேளை உண்டாயினும் உண்டாமென்பார், 'பாம்பு காண்பாரும் உடைத்து' என்றார்.

'பெரிது அகழின் பாம்பு காண்பாரும் உடைத்து' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-21, 6:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே