எற்றே நிலைமையில் நன்னெஞ்சே நின்னொடு வாழ்க்கை – அறநெறிச்சாரம் 33
நேரிசை வெண்பா
அற்ற பொழுதே அறநினைத்(தி) யாதொன்றும்
பெற்ற பொழுதே பிறநினைத்தி - எற்றே
நிலைமையில் நன்னெஞ்சே! நின்னொடு வாழ்க்கை
புலைமயங்கி யன்ன துடைத்து. 33
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
ஒரு நிலையில்லாத நல்ல மனமே! பொருளற்ற காலத்தில் பொருளிருப்பின் அறம் செய்யலாம், இப்பொழுது இல்லையே என்ன செய்வது என்று நினைத்து வருந்துகின்றாய்;
ஏதாவது ஒரு வழியில் செல்வத்தினை அடைந்த காலத்திலோ அறத்தினை மறந்து பிற பாவச்செயல்களைச் செய்ய விரும்புகின்றாய்; இது எப்படி?
உன்னோடு கூடிவாழும் இவ்வாழ்வானது தீயகுணமுடையவர்களோடு சேர்ந்து வாழ்வது போலாகும்.
குறிப்பு:
புலை - தீயகுணமுடையவர்கள்.