அறிவுடையார் குறுகார் மூன்று - திரிகடுகம் 46
இன்னிசை வெண்பா
கால்தூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து
மேல்தூய்மை யில்லாத வெங்களிறுஞ் - சீறிக்
கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார் 46
- திரிகடுகம்
பொருளுரை:
நடையில் தூயது ஆகுந்தன்மை இல்லாத குதிரையும்,
கட்டுத்தறியை முறித்து வீரன் இருப்பதற்கேற்ற மேலிடம் தூயதாம் தன்மை உடையதாயிராத கொடிய யானையும்;
மாணாக்கன் மேல் வைரமடைந்து சீற்றங்கொண்டு சினந்து பாடம் சொல்லுவோனுடைய கல்விச்சாலையும் ஆகிய இம்மூன்றையும் அவற்றின் பயனின்மையை உணர்தலுடையார் சேரார்.
கருத்துரை:
நடைச் சிறப்பற்ற குதிரையும், ஏறிச்செல்ல உதவாத யானையும், முகமலர்ச்சியுடன் கூறாதான் பள்ளியும் வீண் என்பது.
கால்: எண்ணலளவை யாகுபெயராகிய கால் என்பது முதலாகு பெயராய் நடையை யுணர்த்தியது.
இந் நடை ஐவகைப் படும். அவை : மென்னடை, விரைநடை, ஆடுநடை, சுற்றுநடை, ஓட்டநடை,
கலிமா - கலினமா என்பது னகரந்தொக்கு மருவியது போலும்.
கலினம் - கடிவாளம்: கலிக்கின்ற மா என்னலுமாம்.
கலித்தல் – கனைத்தல்; சீற்றம் - சிறிது பொழுது நிகழும் சினம்.