ஒளி மயமான எதிர்காலம்

#பொதிகை மின்னல்
#இலக்கியக் கூடல்

#ஒளி மயமான எதிர்காலம்
(வளையற் சிந்து )

மாயநோயின் கொடுமைகள்
மாண்டுபோகுங் காலம் - இனி
மகிழ்ச்சிபோடும் பாலம் - அதில்
மக்கள்பயணம் நீளும் - இரு
மருந்தூசி போட்டுக்கொள்ள
மாண்புறுமே ஞாலம்..!

காயமிதில் உறுதியேற்றிக்
கருணைவழி செல்வாய் -
பெருங்
கவலைகளைக் கொல்வாய் - எக்
காலத்தையும் வெல்வாய்
இங்கு
கைத்தொழில்கள் பலவிருக்க
கைப்பிடித்துக் கொள்வாய்..!

மட்டில்லாத மகிழ்ச்சி தானே
மறுபிறப்பா லின்று - நுண்
மாய நோயை வென்று - கஞ்சி
மனங்குளிரத் தின்று - ஒளி
மங்கிடாது வாழுகின்றோம்
மரணமதைக் கொன்று..!

பட்டத்துன்பம் விட்டுவிலகி
படர்வெளிச்ச மெங்கும் - பார்
பரவசந்தான் பொங்கும் - உழை
பலன்கள்யாவும் தங்கும்- என்றும்
பண்புடனே வாழவெற்றிப்
பாட்டிசைக்கும் சங்கும்..!

#சொ.சாந்தி

பொதிகை மின்னல் இலக்கியக் கூடலில் வாசித்தக் கவிதை. காலை பட்டி மன்றம். மதியம் கவியரங்கம். எழுத்தாளர் சங்கக் கூட்டத்திற்கும் செல்ல வேண்டிய நிலை என்பதால் முதலில் கவிதை வாசிக்கும் வாய்ப்பினை அளித்த திரு வசீகரன் சார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி .🙏🙏

எழுதியவர் : சொ.சாந்தி (29-Nov-21, 12:05 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 106

மேலே