பொறிகெடும் நாணற்ற போழ்தே – நான்மணிக்கடிகை 44
இன்னிசை வெண்பா
பொறிகெடும் நாணற்ற போழ்தே - நெறிபட்ட
ஐவரால் தானே வினைகெடும் - பொய்யா
நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் - நலமாறின்
நண்பினார் நண்பு கெடும் 44
- நான்மணிக்கடிகை
முதல் மூன்றடிகளிலும் தனிச்சொல் அமைந்திருக்கிறது.
பொருளுரை:
ஒருவனுக்கு நாணமென்பது நீங்கின போதே செல்வம் அழியும்;
தன்வழிப்பட்ட ஐம்பொறிகளால் தீவினைகள் தாமாகவே ஒழியும்;
நீரைப் பெறாத பசும்பயிர்கள் பொய்க்காத விளைவின் நன்மை கெட்டொழியும்;
நண்பின் நலம் மாறினால் நண்பரின் நட்பியல்பு கெட்டுப்போம்.
கருத்து:
நாணம் நீங்கினாற் செல்வங் கெடும்; ஐம்பொறிகள் தன் வழிப்பட்டால் வினை கெடும்; நீரற்றாற் பசும் பயிர்களின் விளைவின் நலம் கெடும்; நன்மை மாறினால் நட்புக் கெடும்.
விளக்கவுரை:
நாணம் என்பதை ஒழுக்கம் என்றும் கொள்ளலாம்;
‘பொறி கெடும் நாணற்ற போழ்தே' என்பதைக் கயிறற்ற போதே பாவை கெடுமென் றுரைப்பாரும் உளர்.
நெறிபட்ட ஐவராலென்பதை ஐவர் நெறிபட்டாலென மாறுக.
நெறிபடல் - தன்வழிப்படல்; வினை - பிறவிக்கு ஏதுவான தீவினை.
தானே என்பதனால் முயற்சியின்றியே கெடுமென்பார்,
பயிர்க்குப் பெய்யா நலமென்பது, நீர் பாய்ச்சி முறையாய்ப் பயிரிட்டால் அது சிறிதுந் தவறாமற் றருங் கதிர் முதலிய விளைபொருட் பயன்களென்க.
நண்பர்க்கு நலமாவது. உற்றுழியுதவலாம்; .