கொடுவினைய ராகுவர் கோடாருங் கடுவினைய ராகியார்ச் சார்ந்து – நாலடியார் 124

நேரிசை வெண்பா

நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து 124

- தீவினையச்சம், நாலடியார்

பொருளுரை:

உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பின் அழற்சியைப் பொருந்தினால், எரிந்து தீயும்படி சுட்டு மிக்க வருத்தந்தரும் நோயை உண்டாக்கும்;

நெறிகோணாத நல்லோரும் தீவினை ஆயினாரைச் சார்ந்து அதனால் நெறிகோணி மிக்க கொடுந்தொழில் உடையராவர்.

கருத்து:

தீச்செயலாளரோடு சேர்தற்கு அஞ்சுதல் வேண்டும்.

விளக்கம்:

இயல்பில் நல்லோரும் தீய சேர்க்கையால் திண்ணமாய்த் தீயோராக மாறி விடுவர் என்று அவ்வகையில் ஐயமின்மையை இச்செய்யுள் உணர்த்திற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-21, 6:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே