கொடுவினைய ராகுவர் கோடாருங் கடுவினைய ராகியார்ச் சார்ந்து – நாலடியார் 124
நேரிசை வெண்பா
நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து 124
- தீவினையச்சம், நாலடியார்
பொருளுரை:
உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பின் அழற்சியைப் பொருந்தினால், எரிந்து தீயும்படி சுட்டு மிக்க வருத்தந்தரும் நோயை உண்டாக்கும்;
நெறிகோணாத நல்லோரும் தீவினை ஆயினாரைச் சார்ந்து அதனால் நெறிகோணி மிக்க கொடுந்தொழில் உடையராவர்.
கருத்து:
தீச்செயலாளரோடு சேர்தற்கு அஞ்சுதல் வேண்டும்.
விளக்கம்:
இயல்பில் நல்லோரும் தீய சேர்க்கையால் திண்ணமாய்த் தீயோராக மாறி விடுவர் என்று அவ்வகையில் ஐயமின்மையை இச்செய்யுள் உணர்த்திற்று.