காமாதி யாலாங் கடுவினைக் கட்டழித்துப் போமாறு செய்வார் புரிந்து – அறநெறிச்சாரம் 45
நேரிசை வெண்பா
அழலடையப் பட்டான் அதற்குமா றாய
நிழலாதி தன்னியல்பே நாடும் - அழலதுபோல்
காமாதி யாலாங் கடுவினைக் கட்டழித்துப்
போமாறு செய்வார் புரிந்து 45
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டவன் அதற்குப் பகையான நிழல் முதலியவற்றையே விரும்பி அடைவான்; அதனை அடைந்தவனை விட்டு வெப்பம் நீங்குதல்போல்,
காமவெகுளி மயக்கங்களால் ஆகிய கொடிய வினையாலாகிய தளையை அழித்து வீடு பேற்றினையடையப் போகின்ற வழியினை விரும்பித் தவம் செய்வோரே முனிவர் ஆவர்.
குறிப்பு; நிழல் ஆதி - நிழல், நீர், காற்று, உணவு, உடை என்பன.